தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு | chance for rain in tn for 6 days from today

1282867.jpg
Spread the love

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வங்கக்கடல் பகுதிகளில் ஒடிசா மற்றும் வட ஆந்திர கடலோரப் பகுதிகளையொட்டி நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது ஒடிசா சில்கா ஏரி அருகில் நிலவுகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா- சத்தீஸ்கர் மாநிலம் அருகில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக் கூடும்.

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு நிலவுவதால் இன்று (ஜூலை 21) முதல் 26-ம் தேதி வரை 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூலை 20-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 10 செ.மீ., மேல்பவானியில் 8 செ.மீ., நடுவட்டம், மேல் கூடலூர், கூடலூர் சந்தை, கோவை மாவட்டம் மக்கினம்பட்டியில் 6 செ.மீ., சின்கோனாவில் 5 செ.மீ., நீலகிரி மாவட்டம் சாம்ராஜ் எஸ்டேட், விண்ட் வொர்த் எஸ்டேட், தேவாலா, குந்தா பாலம், கோவை மாவட்டம் சோலையாறு, வால்பாறை, உபாசி தேயிலை ஆராய்ச்சி நிலையம் ஆகிய இடங்களில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் வரும் 24-ம் தேதி வரை மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *