தமிழகத்தில் ஏப்ரல் 2-வது வாரத்தில் சட்டமன்ற தேர்தல்? பி.எல்.சந்தோஷ் தகவல் – Kumudam

Spread the love

சென்னையில் இன்று பாஜக தேசிய அமைப்புச் செயலர் பி.எல். சந்தோஷ் தலைமையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் பேசிய பி.எல். சந்தோஷ், 2021 சட்டப்பேரவைத் தேர்தலை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. கட்சியின் உள்கட்டமைப்பு மற்றும் வாக்காளர் ஆதரவு வளர்ச்சி அடைந்து வருகிறது.

இதை கருத்தில் கொண்டு அடுத்த தேர்தலை எதிர்கொள்ள கட்சியினர் தீவிரமாக செயல்பட வேண்டும் தேர்தலை முன்னிட்டு கட்சியின் நிலைப்பாடு மற்றும் அமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும் .அதே நேரத்தில், கட்சியின் மூத்த தலைவர்கள் தங்களை முன்னிலைப்படுத்தும் அரசியல் அணுகுமுறையை தவிர்க்க வேண்டும். கட்சி வளர்ச்சி மற்றும் தேர்தல் வெற்றியே முக்கியம் என்பதால், ஒற்றுமையாக செயல்பட வேண்டும். தனிப்பட்ட அரசியல் முன்னேற்றத்தை விட கட்சியின் வெற்றியை முன்னிலைப்படுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாத முதல் வாரத்திலேயே நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 65 நாட்கள் உள்ளது. தேர்தல் அட்டவணை விரைவில் வெளியாகும் வாய்ப்பு இருப்பதால், மாவட்டம் முதல் வாக்குச்சாவடி நிலை வரை அனைத்து நிர்வாகிகளும் தயாராக இருக்க வேண்டும். தேர்தல் பணிகள் உடனடியாக தீவிரப்படுத்தப்பட வேண்டும்.

மொத்தத்தில், தேர்தலை முன்னிட்டு அமைப்பு வலுப்படுத்தல், ஒற்றுமை மற்றும் முன்கூட்டியே தயாராக இருப்பது முக்கியம் என பி.எல். சந்தோஷ் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. கட்சி நிர்வாகிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் தேர்தலை இலக்காக வைத்து பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் ஆலோசனை வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக முக்கியத் தலைவர்கள் நயினார் நாகேந்திரன், எல். முருகன், தமிழிசை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேர்தல் தொகுதி பொறுப்பாளர் பதவியிலிருநது விலகுவதாக அறிவித்த அண்ணாமலை கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *