சென்னை: நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை நிர்ணயம் செய்வதற்காக தமிழகம் வந்துள்ள 3 மத்திய குழுக்களும் இன்று (அக்.25) முதல் பல்வேறு மாவட்டங்களில் முதல்கட்ட ஆய்வை தொடங்குகின்றன.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், டெல்டா உட்பட பல்வேறு மாவட்டங்களில் சம்பா, தாளடி நெல் சாகுபடிப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் இதுவரை 21 லட்சம் ஹெக்டேரில் நெல், சிறுதானியங்கள் உட்பட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதில் 5 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்த நெற்பயிரில் 3.60 லட்சம் ஹெக்டேர் பரப்பிலான நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள 1,819 கொள்முதல் நிலையங்கள் மூலம் 9.67 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நெற்பயிர்கள் அறுவடைக்கு முன்னரே தண்ணீரில் மூழ்கின. அறுவடைசெய்த நெல்லும் அதிகளவு ஈரப்பதத்துடன் உள்ளது. எனவே, நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை தற்போதுள்ள 17-ல் இருந்து 22 சதவீதமாக மத்திய அரசு உயர்த்த வேண்டுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு அண்மையில் கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து தமிழகத்துக்கு 3 குழுக்களை மத்திய உணவுத் துறை அனுப்பியுள்ளது.
இதன்படி முதல் குழுவில், பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள இந்திய தானிய சேமிப்பு மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குநர் ஆர்.கே. ஷாகி, தொழில்நுட்ப அலுவலர்கள் ராகுல் சா்மா, தனூஜ் சர்மா ஆகியோரும், 2-வது குழுவில் அந்த நிறுவனத்தின் துணை இயக்குநர் பி.கே.சிங்,ஷோபித், ராகேஷ் பரலா ஆகியோரும் 3-வது குழுவில் உதவி இயக்குநர் டி.எம்.
பிரீத்தி, பிரியா பட், அனுபமா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். தற்போது தமிழகம் வந்துள்ள இந்த 3 மத்திய குழுக்களும் இன்று (அக்.25) முதல் தங்களது ஆய்வைத் தொடங்கவுள்ளன.
அதன்படி முதல் குழுவினர் அக்.25-ல் செங்கை, அக்.26-ல் திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கின்றனர். 2-ம் குழுவினர் அக்.25-ல் தஞ்சாவூர், மயிலாடுதுறை, அக்.26-ல் திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் அக்.27-ல் கடலூர் ஆகிய பகுதிகளிலும், 3-ம் குழுவினர் அக்.25-ல் திருச்சி,புதுக்கோட்டை, அக்.26-ல் தேனி,மதுரை ஆகிய மாவட்டங்களிலும் ஆய்வு செய்யவுள்ளனர். இந்தக் குழுக்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நெல் மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்து ஆய்வறிக்கையை சமர்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.