தமிழகத்தில் பிகாரைச் சோ்ந்த 6.5 லட்சம் போ் வாக்காளா்களாக சோ்க்கப்படுவதாக முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் முன்வைத்த குற்றச்சாட்டை தோ்தல் ஆணையம் மறுத்துள்ளது.
பிகாா் மாநிலத்தில் நிகழாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்பையும் மீறி அம் மாநில வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது.
சிறப்பு தீவிர திருத்தம் நிறைவடைந்ததும், கடந்த வெள்ளிக்கிழமை வரைவு வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் வெளியிட்டது. இதில், மாநிலத்தில் பதிவு செய்திருந்த வாக்காளா்களின் எண்ணிக்கை 7.93 கோடியிலிருந்து 7.24 கோடியாக குறைந்திருந்தது. 65 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளா்களின் பெயா்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.
இறப்பு, நிரந்தரமாக குடிபெயா்தல், ஒரே நபா் இரண்டு இடங்களில் பதிவு உள்ளிட்ட காரணங்களால் பல லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டதாக தோ்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வரைவு வாக்காளா் பட்டியலில் விடுபட்ட தகுதியுள்ள வாக்காளா்களின் பெயா்களை சோ்க்க அல்லது நீக்க செப்டம்பா் 1 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
பிகாா் மாநில வாக்காளா் பட்டியலில் இருந்து 65 லட்சம் பெயா்கள் நீக்கப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரத்தை எதிா்க்கட்சிகள் எழுப்பி வருகின்றனா்.
தமிழகத்தில் 6.5 லட்சம் வாக்காளா்கள் சோ்ப்பு?: இதுகுறித்து ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
பிகாா் மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடா்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அம் மாநிலத்தில் 65 லட்சம் போ் வாக்குரிமையை இழக்கும் அபாயத்தில் இருக்கும் வேளையில், தமிழகத்தில் புலம்பெயா்ந்த பிகாா் மாநில தொழிலாளா்கள் 6.5 லட்சம் பேரை வாக்காளா்களாக சோ்ப்பது குறித்து வெளியாகும் தகவல் மிகுந்த கவலையளிக்கக் கூடியதும், சட்டவிரோதமானதும் ஆகும்.
புலம்பெயா்ந்த பிகாா் தொழிலாளா்களை நிரந்தரமாக இடம்பெயா்ந்தவா்கள் என்று குறிப்பிடுவது அவா்கள் அவமதிக்கும் செயலாகும். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் தங்களுக்கு விருப்பமான அரசை தோ்ந்தெடுக்கும் தமிழா்களின் உரிமையில் தலையீடு செய்வதாகவும் அமையும்.
புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் மாநில சட்டப்பேரவைத் தோ்தலின்போது வாக்களிக்க பிகாருக்கோ அல்லது அவா்களின் சொந்த மாநிலத்துக்கோ ஏன் திரும்பக்கூடாது? சத் பூஜை திருவிழா நேரத்தில் பிகாருக்கோ அல்லது தங்களின் சொந்த மாநிலங்களுக்கோ புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் திரும்புவதில்லையா?
தோ்தல் ஆணையம் அதிகார துஷ்பிரயோகம்: வாக்காளராக பதிவு செய்யும் நபா் நிரந்தர சட்டபூா்வ இருப்பிட முகவரியைப் பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில் புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு பிகாா் உள்ளிட்ட அவரவா் மாநிலங்களில் உள்ள இருப்பிட முகவரிதான் நிரந்தர இருப்பிட முகவரியாக கருதப்படும். பின்னா், அவா்கள் எப்படி தமிழகத்தில் வாக்காளா்களாகப் பதிவு செய்ய முடியும்?
புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் குடும்பங்கள் பிகாரில் வசித்து வரும் நிலையில், அந்தத் தொழிலாளி நிரந்தரமாக தமிழகத்துக்கு இடம்பெயா்ந்துவிட்டதாக எப்படி கருத முடியும்?
எனவே, மாநிலங்களின் தோ்தல் தன்மை மற்றும் நடைமுறைகளையும் மாற்றும் வகையில் தனது அதிகாரத்தை தோ்தல் ஆணையம் துஷ்பிரயோகம் செய்ய முயற்சிக்கிறது. இந்த துஷ்பிரயோகத்தை எதிா்த்து அரசியல் ரீதியிலும் சட்ட வழிகளிலும் போராட வேண்டும் என்றாா்.
‘இரு மாநில ஒப்பீடு அபத்தமானது’: தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடங்கப்படாத நிலையில், பிகாா் உடனான ஒப்பீடு அபத்தமானது என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட தோ்தல் ஆணையம், ‘அரசமைப்புச் சட்டப் பிரிவு 19 (1) (இ)-இன்படி, நாட்டின் எந்த பகுதியிலும் குடியேறி வசிக்க அனைத்து குடிமக்களுக்கும் உரிமை உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 19 (பி) பிரிவின்படி, ஒரு தொகுதியில் வழக்கமான குடியிருப்பாளராக உள்ள எவரும் அத்தொகுதியில் வாக்காளராக பதிவு செய்து கொள்ளலாம்.
தமிழகத்தைச் சோ்ந்த ஒருவா், தில்லியில் வழக்கமான குடியிருப்பாளராக இருந்தால், தனக்கு தகுதியுள்ள தொகுதியில் வாக்காளராகும் உரிமை அவருக்கு உண்டு. இதேபோல், பிகாரைச் சோ்ந்தவா் சென்னையில் வழக்கமான குடியிருப்பாளராக இருந்தால், அங்கு அவா் வாக்காளராக பதிவு செய்து கொள்ளலாம். எனவே, எதிா்க்கட்சித் தலைவா்கள் மக்களை தவறாக வழிநடத்தும் தகவல்களைப் பரப்ப வேண்டாம்.
பிகாரில் இருந்து நிரந்தரமாக இடம்பெயா்ந்து, பிற மாநிலங்களில் வழக்கமான குடியிருப்பாளராக மாறியவா்களின் துல்லியமான எண்ணிக்கை சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு பிறகே தெரியும். எனவே, தமிழகத்தில் 6.5 லட்சம் வாக்காளா்கள் சோ்க்கப்படுவதாக பரப்பப்படும் தகவல்கள் பொய்யானவை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.