சென்னை: பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்த முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அரசு முன்வரவேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்த கொடூர குற்றவாளிகளை காலில் சுட்டுப்பிடித்து தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். அந்த மாணவி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். குற்றவாளிகளை விரைந்து போலீஸார் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர் என்றாலும், தமிழகத்தில் தொடர்ந்து பாலியல் வல்லுறவு சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.
இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மூவரும் குடிபோதையில் இருந்துள்ளனர். இங்கு மட்டுமல்ல பெரும்பாலான குற்றச் சம்பவங்கள் குடிபோதையில் இருப்பவர்களாலேயே நிகழ்கின்றன.
பிஹார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டதற்கு பிறகு பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறைந்து இருப்பதாக அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, தமிழகத்திலும் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வரவேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.