Last Updated:
கோடை வெயிலைக் கருத்தில் கொண்டு, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் போதிய குடிநீர் வசதி மற்றும் நிழற்குடை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் 2026 ஏப்ரல் 23, அன்று நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள மத்திய பார்வையாளர்களுடனான ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் டாக்டர் எஸ்.எஸ். சாந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள பொது, காவல் மற்றும் செலவினப் பார்வையாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்காக மொத்தம் 326 மத்தியப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவுறுத்தல்கள்: தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மிகக் கடுமையாக அமல்படுத்த வேண்டும். விதிமீறல்கள் குறித்த புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பார்வையாளர்கள் தங்களின் அலைபேசி எண்கள், தங்கியிருக்கும் இடம் மற்றும் மக்களைச் சந்திக்கும் நேரம் ஆகியவற்றை முறையாக விளம்பரப்படுத்த வேண்டும். இதன் மூலம் வேட்பாளர்களும் பொதுமக்களும் தங்களின் புகார்களை எளிதில் தெரிவிக்க முடியும்.
கோடை வெயிலைக் கருத்தில் கொண்டு, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் போதிய குடிநீர் வசதி மற்றும் நிழற்குடை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், வரிசையில் காத்திருக்கும் வாக்காளர்களுக்கு இருக்கை வசதிகள் மற்றும் அலைபேசிகளைப் பாதுகாப்பாக வைக்கும் வசதி செய்யப்பட வேண்டும். வாக்குச்சாவடி தலைமை அதிகாரிகளுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதா என்பதைப் பார்வையாளர்கள் கண்காணிக்க வேண்டும். குறிப்பாக, 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு விவரங்களைப் பதிவேற்றுதல், அழியாத மை வைப்பதில் துல்லியம், படிவம் 17-C ஐ முறையாகப் பூர்த்தி செய்து முகவர்களுக்கு வழங்குதல், மாதிரி வாக்குப்பதிவு தரவுகளை முறையாக அழித்தல், வாக்குச்சாவடிகளில் நடைபெறும் ‘வெப்காஸ்டிங்’ கண்காணிப்பு அறைகளை முறையாகச் சோதித்து, ஒத்திகை நடத்துவதோடு அங்குள்ள ஊழியர்களுக்குத் தவறுகளைக் கண்டறிவதற்கான பயிற்சிகளை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
