சென்னை: தமிழகம் முழுவதும் 14 வாரமாக நடைபெற்றுள்ள 523 நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்களில் 8.21 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாமை கடந்த ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் மொத்தம் 1,256 இடங்களில் முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை தமிழகம் முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.
மருத்துவ ஆலோசனை: இந்த முகாம்களில் பயனாளர்களுக்கு பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், இதய மருத்துவம், எலும்பியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், காது, மூக்கு மற்றும் தொண்டை, மகப்பேறு, இயன்முறை மருத்துவம், பல், கண் மருத்துவம், மனநலம், குழந்தைகள் நலம், நுரையீரல் மருத்துவம் ஆகிய மருத்துவ சேவைகள் மற்றும் இந்திய மருத்துவம் சார்ந்த ஆலோசனைகள் சிறப்பு மருத்துவ நிபுணர்களை கொண்டு வழங்கப்படுகிறது.
பரிசோதனைகள் மட்டுமின்றி, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்தல் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு அங்கீகார சான்றிதழ் வழங்குதல் போன்ற சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 14-வது வாரமாக நேற்று முன்தினம் 39 இடங்களில் நடந்த முகாம்களில் 64,224 பேர் பயனடைந்தனர். இதுவரை 14 வாரமாக நடைபெற்றுள்ள 523 முகாம்களில் 8.21 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர்.