சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை (அக்டோபர் 14) முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடந்த அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, “ இன்று நடைபெற்ற அலுவல் ஆய்வு குழு கூட்டத்தின் முடிவின்படி நாளை முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும்.
நாளை காலை சட்டப்பேரவை கூடியவுடன் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்து இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும். அதன் தொடர்ச்சியாக கரூரில் நடந்த துயரச் சம்பவம், கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன், நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி மற்றும் ஐஏஎஸ் அதிகாரி மருத்துவர் பீலா வெங்கடேசன் உள்ளிட்ட அனைவருக்கும் சட்டமன்றத்தில் இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும். அதைத் தொடர்ந்து எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைவு குறித்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பேரவை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படும்.
அக்டோபர் 15ம் தேதி கூடுதல் மானியக் கோரிக்கை முன் வைக்கப்படும். அதனை தொடர்ந்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும். அக்டோபர் 17ம் தேதி விவாதத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளிப்பார்” இவ்வாறு சபாநாயகர் அப்பாவு கூறினார்.