தமிழக சட்டமன்ற தேர்தல் மார்ச் 10-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவிப்பு? – Kumudam

Spread the love

தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களின் பதவிக்காலம் மே மற்றும் ஜூன் மாதங்களில் முடிவடைய உள்ளது.  அந்த மாநிலங்களில் தேர்தல் நடத்த தேவையான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. கடந்த முறை 2021ம் ஆண்டு பிப்.26ம் தேதி 5 மாநிலங்களிலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. 

ஆனால் தற்போது தேர்தல் தேதி அறிவிப்பு தாமதமாகி உள்ளது. அசாம் மாநிலத்தில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு தேர்தல் நடைமுறைகளை தேர்தல்ஆணைய அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.  இதன் பின்னர் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் தலைமையிலான குழுவினர் வரும் பிப்.26, 27ல் தமிழ்நாடு வந்து ஆய்வு நடத்த உள்ளது. அப்போது,  அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனும், தேர்தல் அதிகாரிகள், உயர் போலீஸ் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்த உள்ளனர். 

அதை தொடர்ந்து மார்ச் 1, 2ம் தேதிகளில் மேற்குவங்கம் செல்ல உள்ளனர். அந்த மாநிலத்தில்  எஸ்ஐஆர் பணி முடிந்து பட்டியல் பிப்.28ம் தேதி வெளியாக உள்ளது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே தேர்தல் தேதி அறிவிப்பு தாமதமாகலாம் என தெரிகிறது. இதற்கிடையே மார்ச் 1 முதல் தேர்தல் நடைபெறவுள்ள மேற்கு வங்கத்தில் மத்தியப் படைகள் நிறுத்தப்படும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்டமாக மேற்கு வங்கத்திற்கு 480 கம்பெனி படைகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. மார்ச் 10க்கு பிறகு மேற்குவங்கத்தின் தேர்தல் பாதுகாப்பு மத்திய படைகள் கண்காணிப்பில் தான் நடைபெறும் என்று அவர்கள் தெரிவித்தனர். இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது மார்ச் 10ம் தேதிக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்ட தேர்தலும், மேற்குவங்கத்திற்கு 3 அல்லது 4 கட்ட தேர்தலும் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிப்பு, மனுத்தாக்கல், பிரசாரம் உள்ளிட்ட அனைத்துக்கும் மொத்தமாக குறைந்தது 30 முதல் 40 நாட்கள் மட்டுமே இந்த முறை அவகாசம் வழங்கப்படும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *