சென்னை: மத்திய அரசுக்கு தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேட்ட 10 வினாக்களுக்கு பதிலளித்த அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலினுக்கு 6 கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 2023-24-ம் ஆண்டு சிஏஜி அறிக்கையின்படி 1,540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.14,808 கோடி நிதி செலவிடப்படாமல் வீணாக்கியது ஏன், 2023-24-ம் ஆண்டு மக்களிடம் வசூலிக்கப்பட்ட மின்சார வரி ரூ.1,985 கோடி. இதில் ரூ.507 கோடி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிதிக்கு செலுத்தாமல் மடைமாற்றியது ஏன்?
மேலும் 2021-22 முதல் 2023-24 வரையிலான 3 ஆண்டுகளில் மத்திய அரசிடம் பெற்ற ஜிஎஸ்டி இழப்பீடுத் தொகையான ரூ.28,024 கோடியில் 10 சதவீதம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டும் என்பது மாநில திட்டக்குழுவின் பரிந்துரை. ஆனால், இவை வழங்கப்படவில்லை ஏன்?
தேர்தலின்போது 511 வாக்குறுதிகள் திமுக சார்பில் கொடுக்கப்பட்டன. இவையன்றி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனியாக வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டது. இவற்றில் 10 சதவீத வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றாமல் 2026 சட்டப்பேரவை தேர்தலை எப்படி சந்திப்பீர்கள்?
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, தமிழகத்தின் கடன் சுமையை குறைப்போம் என்று கூறி, கடந்த 4 ஆண்டுகளில் சுமார் ரூ.5 லட்சம் கோடி புதிதாக
கடன் வாங்கியது ஏன்? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஜிஎஸ்டி சீர்திருத்தம், சாலை திட்டங்கள், ரயில் திட்டங்கள், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம், ஓய்வூதியத் திட்டம், ஜல் ஜீவன் திட்டம், நிதி பகிர்வு உள்ளிட்டவை தொடர்பாக, மத்திய அரசுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு எழுப்பிய 10 கேள்விகளுக்கு பதில் அளித்து சமூக வலைதளத்தில் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.