திருவாரூர்: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் என மத்திய பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
திருவாரூர் அருகே நீலக்குடியில் செயல்படும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழாவில், குடியரசு தலைவர் திரவுபதி மூர்மு பங்கேற்று பட்டங்களை வழங்க உள்ளார். தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் \நாட்டில் உள்ள மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும்.
தமிழ்நாட்டில், திருவாரூர் அருகே நீலக்குடி கிராமத்தில் இது இயங்கி வருகிறது. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த மாணவ, மாணவிகளும் இதில் பயின்று வருகின்றனர் . இந்த நிலையில், கடந்த ஆண்டு 9-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி மூர்மு பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டு அதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்ற நிலையில் கடைசி நேரத்தில் குடியரசுத் தலைவரின் வருகை ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் நிகழாண்டு வரும் செப்டம்பர் 3-ம் தேதி நடைபெற உள்ள பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்பார் என தமிழ்நாடு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த மாணவர்கள், பேராசிரியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.