அமெரிக்க, இஸ்ரேல் படைகள் ஈரான் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலை ஆரம்பித்து ஒரு வாரம் கடந்து விட்டது.
“அமெரிக்கப் படைகளுக்கு தளம் அமைக்க உதவுகின்றன’ எனச் சொல்லி வளைகுடா நாடுகள் சிலவற்றின் மீதும் தாக்குதலை நடத்தி வருகிறது ஈரான்.
எண்ணெய் வளம் நிறைந்த நாடுகள் ஈடுபட்டிருக்கும் இந்தப் போரால் சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விநியோகத்தில் சிக்கல் உண்டாகியுள்ளது. கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் ஏகப்பட்ட கப்பல்கள் நடுக்கடலில் நிற்கின்றன.
இந்தச் சூழலில் போர் தொடங்கியதுமே இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு வரலாம் என்கிற பேச்சு அடிபட்டது. ஆனால் ‘பயப்படத் தேவையில்லை அடுத்த சில தினங்களுக்கான தேவையான கையிருப்பு நம்மிடம் இருக்கிறது’ எனக் கூறி வந்தது மத்திய அரசு.
ஆனால் நேற்று கர்நாடகாவில் இந்தச் சிக்கல்களுக்கான தொடக்கப் புள்ளி வைக்கப் பட்டிருக்கிறது. அங்கு சிலிண்டர் தட்டுப்பாடைக் காரணமாகச் சொல்லி உணவகங்கள் தற்காலிகமாக மூட இருப்பதாக அறிவித்துள்ளனர்.

பிரச்னை பெங்களூருவுக்கு வந்து விட்டால், சென்னைக்கு வர எத்தனை நாள் ஆகப் போகிறது?
எனவே ஒருவேளை சமையல் எரிவாயு விநியோகத்தில் சிக்கல் எழுந்தால் சமாளிப்பது எப்படி என ஆராய தமிழ்நாடு அரசும் அவசரக் கூட்டத்தை நடத்தியுள்ளது.
‘சமையல் சிலிண்டர் விநியோகத்தில் தற்போதைய நிலை என்ன, தமிழ்நாட்டில் சிலிண்டர் தட்டுப்பாடைத் தடுக்க என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன’ என பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் சென்னை பிரிவைத் தொடர்பு கொண்டு விசாரித்தோம்
இந்தியாவில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய மூன்று நிறுவனங்கள்தான் சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் அரசின் பொதுத்துறை நிறுவனங்கள்.