தருமபுரி பட்டாசு விபத்து
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த சின்னமுறுக்கம்பட்டியில் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த சின்னதுரை என்பவருக்குச் சொந்தமான நாட்டு வெடிபொருள்கள் தயாரிக்கும் பட்டாசு குடோன் செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல குடோனில் செண்பகம், திருமலர் உள்பட நான்கு பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இன்று பிற்பகல் நேரத்தில் இந்த குடோனில் எதிர்பாராத விதமாக, தீ விபத்து நேரிட்டு, வெடி பொருள்கள் வெடித்துச் சிதறியதில், குடோனில் வேலை செய்த நான்கு பேரில் செண்பகம், திருமலர், திருமஞ்சு ஆகிய மூன்று பெண்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
கிடங்கில் பணியில் இருந்த ஒருவர் மதிய உணவுக்காக வெளியே சென்றதால் அவர் உயிர் தப்பியதாகக் கூறப்படுகிறது. வெடிவிபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
பட்டாசுக் கிடங்கு விபத்து குறித்து தகவலறிந்த கம்பைநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.