காங்கிரஸ் கட்சி திமுக-வுடன் இருக்குமா தவெக பக்கம் தாவுமா என பரபர விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், “கூட்டணிக்காக காங்கிரஸ் செய்த தியாகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறோம்” என்ற கருத்தை முன்கூட்டியே எடுத்து வைத்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளரும் மக்களவை கொறடாவுமான மாணிக்கம் தாகூர். அவரிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம்.
கூட்டணிக்காக காங்கிரஸ் செய்திருக்கும் தியாகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைப்பதாகச் சொல்லி இருக்கிறீர்களே..?
காங்கிரஸை பொறுத்தவரை உறவுக்கு மதிப்பளிக்கும் கட்சி. அதனால் தான் இழப்புகள் வந்தபோதுகூட பல தியாகங்களைச் செய்திருக்கிறோம். அதேசமயம், காங்கிரஸ் பலமான கட்சி. கட்சி தலைமையின் பெயரில் அந்தக் கட்சிக்காக தமிழகத்தில் விழும் வாக்குகள் மிக முக்கியமானது. ஆனாலும் 2004 முதல் (2014 தவிர) திமுக கூட்டணியில் தொடரும் காங்கிரஸ், அமைச்சரவையில் சேருவதற்கான சூழல் அமைந்த போதும் அதை தவிர்த்திருக்கிறது. இந்தத் தியாகமெல்லாம் தான் போதும் என்கிறேன்.
அப்படியானால் இம்முறை கூடுதல் தொகுதிகளை கேட்பீர்களா?
காங்கிரஸ் தொண்டர்களின் கோரிக்கை அதுவாகத்தான் இருக்கிறது. பல மாநிலங்களில் அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் நெருக்கடிகளை கொடுத்து கட்சிகளை உடைத்து ஆட்சிகளை கவிழ்த்தது பாஜக. அதுபோல் நடந்துவிடக் கூடாது என்பதற்காக 2021-ல் திமுக தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற அதிகமான தொகுதிகளில் போட்டியிட வேண்டிய அவசியம் இருந்தது. அதற்காக அப்போது காங்கிரஸ் தியாகம் செய்தது.
மீண்டும் 25 தொகுதிகள் தான் தருவோம் என்று திமுக சொன்னால் என்ன செய்வீர்கள்?
அத்தகைய முடிவை எடுக்கும் இடத்தில் நான் இல்லை. அதுபற்றி அகில இந்திய தலைமையும் மேலிடப் பார்வையாளர்களும் முடிவெடுப்பார்கள்.
தவெக-வுடன் கூட்டு வைக்கும் திட்டத்தில் இருக்கிறதா காங்கிரஸ்?
இத்தகைய முடிவுகளை எல்லாம் அகில இந்திய தலைமை தான் எடுக்க முடியும். அதைத் தாண்டி வரும் செய்திகள் எல்லாம் வெறும் ஊகங்களாக இருக்கலாம். எங்களைப் பொறுத்தவரை, திமுக-வுடனான இண்டியா கூட்டணி பலமாக இருக்கிறது.
திமுக கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பவர்களில் நீங்கள் முன்னணியாமே..?
இல்லை. காங்கிரஸ் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும்… காங்கிரஸாருக்கு அதிகமான அதிகாரங்கள் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்களில் ஒருவனாய் நான் இருக்கிறேன்.
தவெக கூட்டணி அமைந்தால் காங்கிரஸுக்கு 60 தொகுதிகள் கிடைக்கலாம் என்கிறார்களே… காங்கிரஸில் 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் இருக்கிறார்களா?
காங்கிரஸ் கட்சியில் எப்போதுமே வேட்பாளர்களுக்கு பஞ்சம் இருந்ததில்லை. காங்கிரஸில் சாமானியர்களுக்கும் வாய்ப்பளிக்கப்படுகிறது. அதில் சிலருக்கு வாய்ப்புக் கிடைக்கிறது; பலருக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
வேட்பாளருக்கு பஞ்சமில்லை என்றால், 2019-ல் எதற்காக ஈவிகேஎஸ்ஸை தேனியில் இறக்குமதி செய்தீர்கள்?
அவர் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் முகமாகவும், தன்மானமுள்ள காங்கிரஸாருக்கு தைரியம் கொடுக்கும் தலைவராகவும் இருந்தவர். அவர் நாடாளுமன்றத்துக்கு வரவேண்டும் என ராகுல் காந்தி விரும்பினார். ஆனால், அவரது ஈரோடு தொகுதி மதிமுக-வுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. அதுவுமில்லாமல், தேனியில் அண்ணன் ஆரூண் உடல் நிலை காரணமாக போட்டியிட முடியாததால் அங்கே ஈவிகேஎஸ் நிறுத்தப்பட்டார்.
கூட்டணியில் இருந்தாலும் உள்ளாட்சி பதவிகளில் திமுக தங்களை உதாசீனம் செய்வதாக கீழ்மட்ட காங்கிரஸாருக்கு ஒருவிதமான புழுக்கம் இருக்கிறதே?
மிகப்பெரிய அளவில் இருக்கும் நியாயமான புழுக்கம் அது. 10 பேர் எம்பி ஆவதற்காகவும், 15 பேர் எம்எல்ஏ ஆவதற்காகவும் மட்டுமே கட்சி நடத்த முடியாது. ஆனால், இதையெல்லாம் பொதுவெளியில் பேசுவதைவிட, கூட்டணி அமையும் போது காங்கிரஸ் தலைமை இதை சரியான விதத்தில் பேசிமுடிக்க வேண்டும்.
தமிழக காங்கிரஸார் என்னதான் தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்தாலும் அனைத்தையும் ராகுலிடம் பேசி சரிசெய்துவிடும் திமுக என்கிறார்களே?
ராகுல் காந்தியை பொறுத்தமட்டில் தொண்டர்களின் எண்ணத்துக்கு மதிப்பளிப்பவர். அதுதான் அவரது ஸ்டைல் ஆஃப் பாலிடிக்ஸ். இதை தமிழகத்திலும் பார்க்க முடியும். ராகுல் காந்தியின் பார்வை தொண்டர்களின் பார்வையாகத்தான் இருக்கும்.
தொண்டர்கள் விஜய் கூட்டணியை விரும்புகிறார்கள் என்பதால் தான் ராகுல் காந்தியும் விஜய்யுடன் டச்சில் இருக்கிறாரோ?
அது எனக்குத் தெரியாது. கரூர் சம்பவத்தின் போது விஜய்யிடமும் முதல்வரிடமும் ராகுல் காந்தி பேசி இருக்கிறார். அதுவும் ஆறுதல் சொல்வதற்காகப் பேசியதாக எங்களுடைய மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்திருந்தார். அதை அப்படியே நானும் ஏற்கிறேன்.
தமிழகத்தில் பாஜக அளவுக்கு காங்கிரஸ் வளர்ந்திருக்கிறதா?
பாஜக வளர்ந்திருக்கிறது என்பது ஒரு பொய்யான தோற்றம். ஆனால், காங்கிரஸுக்கு மற்ற தோழர்களை அழித்து கட்சியை வளர்க்கும் பழக்கம் கிடையாது. விட்டுக் கொடுப்பது மட்டுமே காங்கிரஸ் கட்சியின் வேலையாக இருக்கிறது. பாஜக-வை பொறுத்தவரை இது ரிவர்ஸாக இருக்கிறது. கூட்டணியோடு மாநிலத்துக்குள் நுழைந்து கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கட்சியை அடித்துச் சாப்பிடும் தந்திரமெல்லாம் காங்கிரஸ்காரர்களுக்கு தெரியாது. எங்களைப் பொறுத்தவரை மத்திய அரசை எதிர்க்கிறோம். கூட்டணி தர்மத்துக்காக பல வகைகளில் மாநிலத்தில் மவுனமாக இருக்கிறோம். அதனால் காங்கிரஸ் கட்சிக்கு வேக வளர்ச்சி கிடைக்க மறுக்கிறது.
விஜய்யை நம்பி திமுக உறவை முறிப்பது காங்கிரஸுக்கு நல்லதா?
அதை தலைமை தான் முடிவுசெய்ய வேண்டும். எங்களைப் பொறுத்தவரை திமுக – காங்கிரஸ் கூட்டணி சுமுகமாகவே இருக்கிறது.
ஆட்சியில் பங்கு என்பதில் இப்போதும் உறுதியாக இருக்கிறீர்களா?
இதுபற்றி பொதுவெளியில் பேசவேண்டாம் என்று எங்களின் மேலிடப் பார்வையாளர் உத்தரவிட்டிருக்கிறார். அதை மீறுவது நியாயமில்லை என நினைக்கிறேன்.
செல்வப்பெருந்தகையை மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என நீங்களும் தலைமைக்கு அழுத்தம் தருகிறீர்களாமே?
கற்பனையான தகவல். கார்கேயும், ராகுல் காந்தியும் யாரை தலைவராக நியமிக்கிறார்களோ அவர்களோடு பயணிப்பது தான் என்னுடைய பழக்கம். அவர்களுக்கு எதிர்ப்பாக நான் எதையும் பேசமாட்டேன்.
பிஹாரில் மீண்டும் நிதிஷ் – பாஜக கூட்டணி ஆட்சியை தக்கவைத்திருக்கிறதே..?
இது எஸ்ஐஆரால் கிடைத்த வெற்றி. கடந்த தேர்தலில் எங்கெல்லாம் காங்கிரஸ், ஆர்ஜேடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றனவோ, அங்கெல்லாம் சுமார் 30 ஆயிரம் வாக்குகளை தந்திரமாக நீக்கி இருக்கிறார்கள். இதை தேர்தல் ஆணையம் சிஸ்ட்டமேட்டிக்காக செய்திருக்கிறது. இந்த நிலையில், தமிழகத்தில் அதிமுக எஸ்ஐஆரை ஆதரிப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.