சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேர்தலுக்கான பிரசாரமும் சுறுசுறுப்பாக நடந்துவருகிறது. இதற்கிடையில், 85 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தபால் வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சிடிஆர்.நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “85 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தபால் வாக்குப்பதிவுவின் போது தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், குறிப்பிட்ட கட்சியினருக்கு வாக்களிக்குமாறு முதியவர்களை வற்புறுத்துவதாகப் புகார்கள் எழுந்துள்ளது.

இது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது தேர்தல் ஆணையத்திடம் விரிவான புகார் அளிக்கப்படும். தபால் வாக்குப்பதிவின் போது முறையான வீடியோ கண்காணிப்பு இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். பிரசாரக் கூட்டங்களில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களின் எண்ணிக்கை எதிர்பார்ப்பதை விட அதிகமாக இருப்பதால், அவர்களைக் கட்டுப்படுத்தக் காவல்துறை பாதுகாப்பு வளையங்களை முறையாக ஏற்படுத்த வேண்டும்.
தேர்தல் களத்தில் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் டோக்கன்கள் விநியோகிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாகத் திருப்பரங்குன்றம் போன்ற தொகுதிகளில் ரூ.8,000 மதிப்பிலான டோக்கன்கள் வழங்கப்படுவதாகத் தகவல்கள் கிடைத்திருக்கிறது. பணம் கொடுத்தாலும் மக்கள் மாற்றத்தை நோக்கியே வாக்களிப்பார்கள். 2011 தேர்தலைப் போலத் தி.மு.க-விற்குப் பாடம் புகட்டுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. கார்த்திக் சிதம்பரம் மற்றும் ப.சிதம்பரம் ஆகியோர் தங்களின் சுயலாபத்திற்காகத் தமிழக காங்கிரஸைத் தி.மு.க-விடம் அடமானம் வைத்துவிட்டார்கள். அவர்களுக்குத் தனிப்பட்ட மக்கள் செல்வாக்கு இல்லை.

த.வெ.க பிரசாரங்கள் ரத்து செய்யப்பட்டதாக வெளியாகும் செய்திகள் தவறானவை. அனுமதி கிடைப்பதில் உள்ள தாமதமும், ஊடகங்களில் வரும் தவறான தகவலுமே குழப்பத்திற்குக் காரணம். ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஆன்லைனில் கசிந்தது ஒரு திட்டமிட்ட அரசியல் சதி. தேர்தலுக்கு சில நாள்களுக்கு முன்பு இது போன்ற நிகழ்வுகள் நடப்பது மன உலைச்சலையும் நஷ்டத்தையும் ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது. இது குறித்துத் தயாரிப்புத் தரப்பு விசாரணை நடத்தி வருகிறது.
தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்பட்டு, முறைகேடுகளைத் தடுத்து, அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். எங்கள் தலைவரின் பிரசாரத்தைக் காண லட்சக்கணக்கான மக்கள் திரள்கிறார்கள். அப்ரூவல் இல்லாத நேரத்தில் பேசுவது பாதுகாப்புச் சிக்கல்களை உண்டாக்கும் என்பதால், மக்களின் நலன் கருதி தலைவர் பேசுவதைத் தவிர்க்கிறார்.

இன்னும் ஒரு வாரம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், எங்கள் பிரசாரம் மிகத் தீவிரமாகவும், வெற்றிகரமாகவும் அமையும். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது கள நிலவரத்தில் தெளிவாகத் தெரிகிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் ஒரு மிகப்பெரிய வெற்றியைத் தரும் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது” எனக் குறிப்பிட்டார்.