புதுச்சேரியில் த.வெ.க-வின் மக்கள் சந்திப்புக் கூட்டம் டிசம்பர் 9-ம் தேதி நடைபெற்றது. உப்பளம் துறைமுக மைதானத்தில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில், `5,000 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்… வெளியூர் நபர்களுக்கு அனுமதி கிடையாது… கியூ-ஆர் கோடுடன் கூடிய பாஸ் இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி…’ என்று புதுச்சேரி காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
த.வெ.க தரப்பும் அதற்கு ஒப்புக்கொள்ள, அன்றைய தினம் விஜய்யும் வந்து சேர்ந்தார். பாஸ் வைத்திருந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று காவல்துறை திரும்ப திரும்ப சொன்னதால், பாஸ் கிடைக்காதவர்கள் நிகழ்ச்சி நடக்கும் மைதானத்திற்கு வரவில்லை.
மற்றொருபுறம், `ஒரு பாஸுக்கு இரண்டு நபர்கள் வரலாம்’ என்று ஒருசில உள்ளூர் த.வெ.க நிர்வாகிகள் பாஸ் விநியோகித்ததை நம்பி அங்கு சென்ற சிலர், காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அதனால் அங்கு ஏற்பட்ட சலசலப்பை முடிவுக்கு கொண்டுவர நினைத்த புஸ்ஸி ஆனந்த், `பாஸ் இல்லாதவர்களும் உள்ளே வரலாம்’ என்று மைக்கில் தெரிவித்தார். அப்போதுதான் சீனியர் எஸ்.பி ஈஷாசிங் செய்த சம்பவம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.
அதற்கடுத்து நடந்த சம்பவம்தான் தற்போது வைரலாகி வருகிறது. ஈஷா சிங் மைக்கை பிடுங்கியதும் புஸ்ஸி ஆனந்த் முகம் வெளிறிப் போய் ஸ்தம்பித்து நின்றுவிட, அந்த இடம் பதற்றமானது. அந்த சூழலைப் புரிந்துகொண்ட சட்டம் ஒழுங்குப் பிரிவின் சீனியர் எஸ்.பி கலைவாணன், ஈஷா சிங்கை அமைதிப்படுத்தி அவரிடம் இருந்த மைக்கை வாங்குகிறார்.
அதையடுத்து மைதானத்தை நோக்கி முன்னேறுவதற்கு முண்டியடித்துக் கொண்டிருந்த கூட்டத்தை, `அமைதியா இருங்க…’ என்று மைக்கில் கத்தியவாறு, அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த காவலர்களை அலர்ட் செய்கிறார்.