மத்திய அமைச்சருக்கு தண்ணீர் காட்டிய ரங்கசாமி!
குறிப்பாக அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பா.ஜ.கவைச் சேர்ந்த இரண்டு பேர், `என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லையென்றால், நாங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை’ என்று வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்கள். அதையடுத்து, `த.வெ.க-வுடன் கூட்டணி அமைப்பீர்களா?’ என்ற கேள்வியுடன் என்.ஆர்.காங்கிரஸின் பொதுச் செயலாளர் என்.எஸ்.ஜே ஜெயபாலிடம் நாம் பேசியபோது, `ல.ஜ.க கூட்டணிக்குள் வருவதை நாங்கள் விரும்பவில்லை. பா.ஜ.க அதை ஏற்கவில்லை என்றால் நாங்கள் வேறு முடிவை எடுப்போம். அதேபோல த.வெ.க-வுடனான கூட்டணிக்கும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன’ என்று முடித்துக் கொண்டார்.

இதற்கிடையில் என்.ஆர்.காங்கிரஸின் கோரிக்கையை டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் கூறிய மன்சுக் மாண்டவியா, 19-ம் தேதி மதியம் 1 மணிக்கு முதல்வர் ரங்கசாமியை சந்திப்பதாக திட்டமிடப்பட்டது. அந்த தகவல் முன்கூட்டியே முதல்வர் ரங்கசாமிக்கும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினம் 12.30 மணிக்கு திருச்செந்தூர் கோயிலுக்கு கிளம்பிச் சென்றுவிட்டார் முதல்வர் ரங்கசாமி. அவரின் இந்த தொடர் புறக்கணிப்பால் துவண்டு நிற்கிறது பா.ஜ.க
இதுகுறித்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, “சுயேச்சை மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ-க்களை வளைத்து வைத்திருக்கும் லாட்டரி சார்லஸ் மார்ட்டின், இந்த தேர்தல் அவர்களை களமிறக்கி வெற்றிபெற வைக்க நினைக்கிறார். அவர்கள் மூலம் தேர்தலுக்குப் பிறகு ரங்கசாமியை முதல்வர் பதவியில் இருந்து இறக்கிவிட்டு, புதுச்சேரியை கேசினோ பூமியாக்குவதுதான் அவர்கள் திட்டம். தவிர, பா.ஜ.க சார்லஸ் டீமை ஏ.டி.எம் இயந்திரமாக பார்க்கிறது. அதனால்தான் இப்படி முரண்டு பிடிக்கிறார்கள்” என்றார்.
இதுகுறித்து பா.ஜ.க தரப்பில் பேசியபோது, “என்.ஆர்.காங்கிரஸ் பா.ஜ.க கூட்டணியே தொடரும். என்.டி.ஏ கூட்டணியில் ல.ஜ.க இருக்காது. இன்று முடிவு அறிவிக்கப்பட்டுவிடும்” என்றனர்.