காவிரி – மேட்டூர் அணை திட்டம் வெறும் அணைச்சுவரை மட்டுமல்லாமல், அதை சுற்றியிருந்த முழு குடியிருப்பு மற்றும் அடிப்படை வசதிகளையும் உள்ளடக்கிய பெரும் முயற்சியாக இருந்தது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள் ஒரே இடத்தில் பணியாற்ற வேண்டிய சூழலில், தற்காலிக முகாம்களில் மட்டும் போதாமல், திட்டமிட்ட நகரம் ஒன்றை அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
முதலில் கர்னல் எல்லீஸ் சுட்டிக்காட்டிய “SITE-D” அருகே முகாம்கள், அலுவலகங்கள், வீடுகள் அமைப்பதற்கான வரைபடங்கள் தயாரிக்கப்பட்டிருந்தது. ஆனால், பாறை தன்மை மற்றும் வெள்ள அபாயம் காரணமாக இடம் மாற்றப்பட்டதால், அந்தப் பணிகள் நிராகரிக்கப்பட்டன.

இதற்கிடையில் வேலை தேடி வந்த தொழிலாளர்கள் சுகாதார வசதியின்றி நேரடியாக ஆற்றைப் பயன்படுத்தியதால் காலரா பரவியது. சிறிய மருத்துவக் குழுவின் முயற்சியால் அது கட்டுப்படுத்தப்பட்ட போதும், சுகாதார நடவடிக்கைகளின் அவசியம் தெளிவானது.
இதையடுத்து, மேட்டூர் கிராமம் “மேட்டூர் நகரியம்” (METTUR TOWNSHIP) என்ற அடிப்படையில் திட்டமிடப்பட்டது. தொழிலாளர்களுக்கான குடியிருப்புகள் முதலில் மண் சுவர்க் குடிசைகளாக அமைக்கப்பட்டாலும், மழையால் அவை விரைவில் சேதமடைந்தன.
எனவே, சுட்ட செங்கற்கள், கற்கள், சிமெண்ட் பயன்படுத்தி சுவர்கள் எழுப்பப்பட்டு, ஓடு கூரைகள் போடப்பட்டன. உள்ளூர் மற்றும் மங்களூர் ஓடுகள், களிமண் டைல்ஸ் ஆகியவை பயன்பட்டன. சிறிய வீடுகளுக்கு மூங்கில், பெரிய கட்டிடங்களுக்கு வனத்துறையில் இருந்து மரங்கள் எடுக்கப்பட்டன. கதவுகள், ஜன்னல்கள் கான்கிரீட் சட்டம் அல்லது பில்லமருது போன்ற நாட்டு மரங்களால் செய்யப்பட்டது.