தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து தற்போது வரை ஒரு லிட்டருக்கு ஒரு பைசாதான் வசூலிக்கப்பட்டு வருகிறதா? என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான காமராஜ், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “நான் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் பெறப்பட்ட பதிலில், தாமிரபரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள பல நிறுவனங்கள், நீர் வரி பாக்கியைத் தராமல் சுமார் ரூ.2.50 கோடிக்கு மேல் அரசுக்கு வருவாய் இழப்பினை ஏற்படுத்தியுள்ளன.
தனியார் சிமெண்ட் ஆலை மற்றும் சில நிறுவனங்கள் நீர் வரி பாக்கியைச் செலுத்தாமல் தொடர்ந்து நீரை எடுத்து பயன்படுத்தி வருகின்றன.

இதனால், அரசுக்கு தொடர் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதுடன் சுற்றுச்சூழலும் கடுமையாகப் பாதிக்கிறது. தாமிரபரணி ஆற்றிலிருந்து நீர் எடுத்துவரும் அனைத்து நிறுவனங்களிடமும் நீர் வரி பாக்கியை வசூலித்து அந்த நிதியை மாசுபட்டு வரும் தாமிரபரணி ஆற்றின் பாதுகாப்பு மற்றும் புனரமைப்பிற்குப் பயன்படுத்த வேண்டும்” எனக் கூறியிருந்தார்.