ராமேசுவரம்: தாய்லாந்தில் நவ.28ம் தேதி நடைபெறும் மிஸ் ஹெரிடேஜ் இன்டர்நேஷனல் 2025 அழகி போட்டிக்கு ராமநாதபுரம் மாவட்ட விவசாயி ஒருவரின் மகள் தேர்வாகியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தெற்கு காக்கூரைச் சேர்ந்த விவசாயி கஜேந்திர பிரபு. இவரது மகள் ஜோதிமலர் (28) பி.டெக் முடித்து பெங்களுர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருவதுடன் மாடலிங் செய்து வருகிறார். சமீபத்தில் புனேயில் நடந்த மிஸ் டூரிசம் அம்பாசிடர் ஹெரிடேஜ் இந்தியா 2025 போட்டியில் ஜோதிமலர் பங்கேற்றார்.
100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் ஜோதிமலர் மிஸ் டூரிசம் அம்பாசிடர் ஹெரிடேஜ் இந்தியா 2025 பட்டத்தை வென்றார். இதனைதொடர்ந்து வருகின்ற நவ.28 தாய்லாந்தில் நடைபெற உள்ள ஹெரிடேஜ் இன்டர்நேஷனல் 2025 அழகி போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்வதற்காக தேர்வாகி உள்ளார்.
இது குறித்துப் பேசிய ஜோதிமலர், “தாய்லாந்தில் சர்வதேச நாடுகளுக்கிடையே அமைதி, சுற்றுலா, கலச்சார பரிமாற்றத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்காக மிஸ் ஹெரிடேஜ் போட்டி நடைபெற உள்ளது. இதில் இந்தியாவில் இருந்து பங்கேற்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது.
சர்வதேச மேடையில் இந்தியாவின் பாராம்பரிய, வளமான கலச்சாரம், மரபினை உலகிற்கு வெளிபடுத்துவதற்கு கிடைத்த வாய்ப்பாக கருதி பெருமையடைகிறேன்” என்று ஜோதிமலர் கூறினார்.