மேடை நாடகமாக இருந்தாலும் சரி, வாழ்க்கையாக இருந்தாலும் சரி, எதற்கும் அஞ்சாதவர் எம்.ஆர்.ராதா. சமூக அவலங்களை முகத்திற்கு நேராகச் சுட்டிக்காட்டிய `கலகக்காரர்’. ராதிகாவும் அப்படியே. அரசியல் மேடைகளாகட்டும் அல்லது சினிமா சங்க விவகாரங்களாகட்டும், எதற்கும் பயப்படாமல் தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
எம்.ஆர்.ராதா வெறும் நடிகர் மட்டுமல்ல, அவர் ஒரு சிந்தனையாளர். பகுத்தறிவுப் பாதையில் மிகத் தெளிவான பார்வை கொண்டவர். அதேபோல், ராதிகா ஒரு சிறந்த தொழில்முனைவோர் (Entrepreneur). சினிமா வாய்ப்புகள் குறைந்தபோது முடங்கிப் போய்விடாமல், சின்னத்திரையில் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர். சந்தை எதை எதிர்பார்க்கிறது, காலத்திற்கு ஏற்ப தன்னை எப்படி மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற அந்த சமயோஜிதம் இருவருக்கும் பொதுவானது.

நடிப்பைப் பொறுத்தவரை இருவரும் இயல்பான கலைஞர்கள். எம்.ஆர்.ராதா வில்லத்தனத்திலும் நையாண்டி, தனித்துவமான குரல் வளம், உடல் மொழி மூலம் ரசிகர்களைத் தன்வசப்படுத்துவார். ராதிகா, எமோஷனல் அல்லது அதட்டலான காட்சிகளாகட்டும், அதில் எதார்த்தம் இருக்கும். `கிழக்கே போகும் ரயில்’ படத்தில் தொடங்கிய அந்தத் துடிப்பு, இன்று வரை அவரிடம் குறையவே இல்லை.
எம்.ஆர்.ராதா ஒரு சகாப்தம் என்றால், அந்தச் சகாப்தத்தின் நீட்சிதான் ராதிகா!