சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று (பிப்.24) நடைபெற்றிருக்கிறது.

இதில் கலந்துகொண்டு பேசிய ராதிகா, “இந்தப் படத்தைச் சில நாட்களுக்கு முன்பு கமல் சார் பார்க்கும்போது அவருடன் சேர்ந்து நானும் பார்த்தேன். படத்தைப் பார்த்து ரசித்து சிரித்தேன்.
இந்தப் படத்தைப் பார்த்தபோது ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய படம் இது என்று எனக்குத் தோன்றியது. அவர் இந்த வேஷம் போட்டு நடிக்க மாட்டார். அதனால் அக்கதாபாத்திரத்தை பெண்ணாக மாற்றி நடிக்க வைத்திருக்கிறார்கள்.
இந்தப் படத்திற்கு மேக்கப் போடும்போது எனக்கு கோபம்தான் வந்தது. நான்கரை மணிநேரம் மேக்கப் போடுவார்கள். அந்தச் சமயத்தில்தான் கமல்ஹாசனுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.
ஒரு கதாபாத்திரத்திற்கு மேக்கப் போடுவது நமக்கு கடினமாக இருக்கிறதென்றால் அவர் எவ்வளவு கதாபாத்திரங்களுக்கு மேக்கப் போட்டிருப்பார். சலிக்காமல் அதைச் செய்திருக்கிறார்.

அவ்வை சண்முகி படத்திற்கு அவர் மேக்கப் போட்டது பற்றி என்னிடம் சொல்லியிருக்கிறார். 3 மணி நேரத்திற்கு மேல் முகத்தில் இருந்து அந்த மேக்கப் கொட்டும் அதையெல்லாம் பிடித்துக்கொண்டு நடிப்பேன் என்று கமல் சார் சொல்லியிருக்கிறார்.
இந்தக் கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டதற்கு அவர்தான் இன்ஸ்பிரேஷன். அவர் எப்போதும் சொல்லுவார், ராதிகா நீ தெரியக்கூடாது, அந்தக் கதாபாத்திரம்தான் தெரிய வேண்டும் என்று சொன்னார். அந்த வார்த்தை என் மனதில் ஒட்டிக்கொண்டது” என்று பேசியிருக்கிறார்.