தமிழகர்கள் வாழும் ஊர்களில் எல்லாம் முனீஸ்வரன் எனப்படும் முனி வழிபாடு கட்டாயம் இருக்கும். பயம் விலக, தீராத பிரச்னைகள் தீர, வாழ்வில் சுபிட்சம் பெருக மக்கள் முனீஸ்வரனை சரணடைவர். அப்படி ஒரு முனீஸ்வரர் கோயில்தான் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் வட்டம் மாம்பாறை கிராமத்தில் அமைந்திருக்கிறது. இந்த முனீஸ்வரரை முனியப்பன் என்று அழைக்கிறார்கள் பக்தர்கள். மாம்பாறையில் இருக்கும் மலை மீது அமைந்திருக்கும் இந்த முனியப்பன் கோயில் மிகவும் மாறுபட்ட சில வழிபாடுகளைக் கொண்டிருக்கிறது. ஆம், இந்த ஆலயத்தில் பெண்கள் வழிபாடு செய்ய அனுமதி இல்லை. மேலும் இங்கே படைக்கும் உணவையும் பெண்கள் சாப்பிடக்கூடாது. ஏன் அப்படி என்பதை அறிந்துகொள்ள தலபுராணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

மகாபாரத காலத்தில் நடந்த நிகழ்வு அது. வனப்பகுதி ஒன்றில் 12 வருடங்களுக்கு ஒருமுறை மட்டும் பழம் தரும் மரம் ஒன்று இருந்தது. அதன்கீழ் `சைந்தவா’ என்ற முனிவர் தவமிருந்தார். பாண்டவர்கள் வனவாசத்தின்போது அந்தப் பகுதிக்கு வந்தனர். பாஞ்சாலி அதை சாப்பிட விரும்பியதால், அர்ஜுனன் அம்பு தொடுதந்தான். பழம் தரையில் விழுந்தது.
இந்த தருணத்தில் கிருஷ்ணபகவான் அங்கு தோன்றி “அந்த அற்புதப் பழத்தையே முனிவர் சாப்பிடுவார். அவர் விழிக்கும்போது, பழம் இல்லையென்றால் அவரது சாபத்துக்கு ஆளாக நேரிடும். ஆகவே, பழத்தை எப்படியேனும் மரத்தில் சேர்த்துவிடுங்கள்” என்றார் கிருஷ்ண பரமாத்மா.
பாண்டவர்களும் அந்தப் பழத்தை மரத்தில் ஒட்டவைத்துவிட்டு, அங்கிருந்து கிளம்பி விட்டார்கள். கிருஷ்ணர் மட்டும் மேய்ப்பனாக உருவம் ஏற்று மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். தவம் களைந்து கண்விழித்த முனிவர் மரத்தில் தொங்கிய பழத்தைக் கண்டார். அந்தப் பழம் அடிபட்டிருப்பதைக் கண்டதும், அதற்குக் காரணம் அருகில் மாடு மேய்த்துக் கொண்டிருப்பவரே என்று எண்ணி கிருஷ்ணரைத் துரத்தினார். ஒரு கட்டத்தில் கிருஷ்ணபகவானின் தலைமுடியைப் பிடித்தார் முனிவர். அக்கணம் ஞானதிருஷ்டி கைகூட, நடந்தவற்றை அறிந்தார் முனிவர். கிருஷ்ணரிடம் மன்னிப்புக் கேட்டார். அதேவேளை,
ஒரு பெண்ணால்தான் மரத்திலிருந்து கனி பறிக்கப்பட்டது என்பதை அறிந்தவர், “இங்கு அமையப்போகும் கோயிலில் பெண்களுக்கு என் தரிசனம் கிடையாது. நான் தவிமிருந்த காலத்தில் எனக்கு உதவிய முனியப்பசாமிக்கு, எனக்கு எதிரே கூடாரம் அமைத்து என்னையும் அவரையும் வழிபடலாம்” என்று கூறிவிட்டு, அப்படியே சிலையாகிவிட்டாராம்!
அன்றுமுதல் இங்கே முனியப்பன் கோயில் கொண்டு அருள்கிறார். முனியப்பன், ரோட்டு முனியப்பன் ஆகிய தெய்வங்களே இங்கு பிரதானம். முனிவரின் வாக்குப்படி, இன்றைக்கும் ஆண்கள் மட்டுமே இங்கு வந்து வழிபடுகிறார்கள். அதேபோல், முனியப்ப சாமிக்கு மட்டும் கிடா, சேவல் பலியிட்டு அசைவப் படையல் சமர்ப்பிக்கலாம் என்பதுவும் முனிவரின் திருவாக்கு. அதன் படியே வழிபடுகிறார்கள் பக்தர்கள்.

கோயிலுக்கு வழிபட வரும் ஆண் பக்தர்கள், அசைவ உணவு சமைத்து, முனியப்பன் சுவாமிக்குப் படைத்துவிட்டு, பின்னர் சமைத்த உணவை அங்கேயே சாப்பிட்டுவிட்டுச் செல்வது வழக்கம். சாப்பாடு, கறி மீதி இருந்தால் வீட்டுக்கு எடுத்துச்செல்ல மாட்டார்கள். அங்கேயே குழி தோண்டி புதைத்து விடுகின்றனர். பலிகொடுக்கப்படும் பிராணிகளிலும் பெண் இனத்தைத் தவிர்த்துவிடுகிறார்கள்.
கொடுத்த கடன் வெகுநாள்களாக திரும்பி வராத நிலையில், அதன்பொருட்டு கஷ்டப்படும் பக்தர்கள், அதுகுறித்த பிரார்த்தனை வேண்டுதலை ஒரு சீட்டில் எழுதி, கோயிலில் உள்ள வேலில் கட்டித் தொங்கவிடுகிறார்கள். இப்படிச் செய்வதால் கொடுத்த கடன் விரைவில் வசூலாகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதேபோல், கடனாகக் கொடுத்தத் தொகை மீண்டு வந்ததும், கிடா வெட்டி நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். தை, மாசி, ஆடி மாதங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் வருகிறது.
மாம்பாறை மலைமீது அமைந்துள்ள மரகத மாமலை பாண்டவர் குகையில் பஞ்சபூத நாயகி, திரெளபதி பாஞ்சாலி அம்மன், நாக வடிவில் சித்தர் வடிவம், யாக குண்டம், தீர்த்தம் வேண்டி தவ நிலையில் இருக்கும் கங்காதேவியின் திருவடிவம் ஆகியவற்றை தரிசிக்கலாம்.
மலையின் மீது `பாழி’ ஒன்று உள்ளது. பாறைகளுக்கு நடுவில் உள்ள பிளவையே பாழி என்பார்கள். ஆழம் காண முடியாத பள்ளம் என்றும் கூறுவர். இடியின் காரணமாகவும் பாழிகள் ஏற்படுவது உண்டு. இந்த மலையில் உள்ள பாழி, அர்ஜுனன் அம்பு விட்டதால் ஏற்பட்டது என்றோரு நம்பிக்கை நிலவுகிறது.

இந்த மலையிலுள்ள பாழி மிகவும் பழைமையானது. உருவான காலம் தொட்டு இன்றுவரையிலும் இதில் நீர் வற்றியதில்லை என்கிறார்கள். இதன் நீரை இளநீருடன் கலந்து பருகினால் பிணிகள் தீரும் என்பதும் இங்குள்ள நம்பிக்கை.
மாம்பாறை முனியப்ப சாமியை தரிசித்து வழிபட, தமிழகம் மட்டுமன்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரபிரதேசம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திண்டுக்கல் செல்லும் அன்பர்கள் வாய்ப்பிருந்தால் மாம்பாறை முனியப்பனையும் தரிசித்து வாருங்கள். வாழ்வில் நன்மைகள் வரிசைகட்டும்.