ஆனால் தி.மு.க முதலில் பேச்சுவார்த்தைக்கு நேரம் ஒதுக்கவில்லை. பிறகுதான் மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் 3-ம் தேதி தலைவர் அறிவாலயத்தில் கண்டிப்பாக இருப்பார். அப்போது சந்திக்க வாய்ப்பு கொடுங்கள் எனச் செல்வப்பெருந்தகை தரப்பு கோரிக்கை வைத்தது.
இதையடுத்துதான் அறிவாலயத்துக்கு வரும்படி தெரிவித்தார்கள். இதையடுத்து 2ம் தேதி இரவு டெல்லியிலிருந்து கிரிஷ் சோடங்கர் தலைமையிலான குழு சென்னைக்குப் புறப்பட்டது. மறுநாள் சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை நடத்திவிட்டு, மதியம் அறிவாலயம் சென்றனர்.
அங்கு அவர்களை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார். அப்போது காங்கிரஸ் தரப்பில் சென்றவர்கள், ‘வரும் தேர்தலில் 40 தொகுதிகளைக் காங்கிரஸுக்கு ஒதுக்க வேண்டும். அதிலும் தற்போது காங்கிரஸ் வசம் இருக்கும் தொகுதிகளை மாற்றக் கூடாது. நம் கூட்டணி பலமாக இருந்தால்தான் பா.ஜ.க-வை தமிழகத்துக்குள் கால் ஊன்ற விட முடியாது’ எனச் சொல்லியிருக்கிறார்கள்.
இதையெல்லாம் கவனமாகக் கேட்ட முதல்வர் ஸ்டாலின், ‘தி.மு.க சார்பில் தேர்தல் பேச்சுவார்த்தைக்கு அறிவிக்கப்படும் குழுவுடன் பேசிக்கொள்ளுங்கள்’ எனத் தெரிவித்து அனுப்பி வைத்திருக்கிறார்” என்றனர் விரிவாக.
இதுகுறித்து விளக்கம் பெறுவதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தைத் தொடர்பு கொண்டோம். அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.
பிறகு கேள்விகளை குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பி வைத்தோம். அதற்கு அவர், “அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிதான் வெளியிட்டது” எனச் சுருக்கமாக நமக்கு பதில் அனுப்பி வைத்தார்.
ஒருவேளை கட்டுரை வெளியான பிறகு அவர் தனது கூடுதல் கருத்தைத் தெரிவிக்கும் பட்சத்தில் அது உரிய பரிசீலனைக்குப் பிறகு பிரசுரிக்கப்படும்!