காங்கிரஸ் தலைமையின் கனத்த மௌனம்
தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய மாவட்ட தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று டெல்லியில் ராகுலை சந்தித்து பேச உள்ளார்கள். குறிப்பாக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி எந்த கூட்டணியில் இருக்கும்? என்கிற கேள்விக்கான முடிவு இன்று டெல்லியில் தெரிந்துவிடும் என்கிறார்கள் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள்.
அதே நேரம் டெல்லி காங்கிரஸ் தலைமையின் கனத்த மௌனமே இந்த கூட்டணி குழப்பத்திற்கு காரணம் என்கிற குற்றச்சாட்டும் உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன? டெல்லி காங்கிரஸ் தலைமை என்னதான் நினைக்கிறது? என்கிற விசாரணையில் இறங்கினோம். இதுகுறித்து நம்மிடம் விரிவாக பேசினார் மூத்த காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் .

சோனியாவின் நம்பிக்கைக்குரிய நண்பர்
“காங்கிரஸ்- தி.மு.க இடையிலான கூட்டணி என்பது 2004-ம் ஆண்டு முதல் இப்போது வரை நீடித்து வருகிறது. அதில் 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மட்டும் காங்கிரஸ் கட்சி தனித்து நின்றது. அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்வியும், அகில இந்திய அளவில் பா.ஜ.க வின் எழுச்சியும் காங்கிரஸ் கட்சியை மீண்டும் தி.மு.க பக்கம் கொண்டு வந்தது.
கருணாநிதி உயிரோடு இருந்த வரை சோனியாவின் நம்பிக்கைக்குரிய நண்பராகவே இருந்தார். அதனால் கூட்டணி முதல் சீட் சேரிங் வரை அனைத்தும் இரண்டு தலைவர்களும் பேசி முடிக்க கூடிய விஷயமாக இருந்தது.
இதனால் கூட்டணியில் எந்த சிக்கலும் எழாமல் இருந்தது. இன்னும் ஒரு படி மேலே சொல்ல வேண்டும் என்றால், 2ஜி வழக்கில் கனிமொழியை கைது செய்த போது கூட உடனடியாக காங்கிரஸ் கூட்டணியை விட்டு தி.மு.க வெளியே வரவில்லை. அதற்கு காரணம் கருணாநிதியின் சாணக்கிய தனம். இன்று காங்கிரஸ்- தி.மு.க இடையே கசப்பு உணர்வு மேலோங்க இரண்டு கட்சிகளின் தலைமைக்குள் சரியான புரிதல் இல்லாமல் போனது ஒரு காரணம்.