கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் தொகுதிகளில் தி.மு.க போட்டியிடுகிறது.
கடந்தமுறை வென்ற பத்மநாபபுரம் தொகுதி கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் தொகுதியை மேயர் மகேஷ் எதிர்பார்த்து வேலைசெய்து வந்தார். ஒவ்வொரு சமுதாய கோயில்களுக்கும் சொந்த செலவில் கலையரங்கம் அமைத்துகொடுப்பது, ஷெட் மற்றும் தரைத்தளம் அமைத்துகொடுப்பது எனப் பணிகள் செய்துவந்தார்.
கடந்த முறை கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஆஸ்டின் தி.மு.க அமைப்பு துணைச் செயலாளராக ஆனதைத் தொடர்ந்து சென்னை அறிவாலயத்தில் கட்சிப்பணிகளைச் செய்துவந்தார்.
மீண்டும் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட விரும்பாமல் இருந்துவந்த ஆஸ்டின் கடைசிக்கட்டத்தில் நாகர்கோவில் மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு போட்டிருந்தார்.
இந்த நிலையில் மேயர் மகேஷ் கன்னியாகுமரி தொகுதி வேட்பாளராகவும், ஆஸ்டின் நாகர்கோவில் தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு என்ன காரணம் எனத் தி.மு.க வட்டாரத்தில் கூறுகையில், “கன்னியாகுமரி தொகுதியில் இந்து நாடார் வேட்பாளரை நிறுத்த வேண்டும் எனத் தி.மு.க-வினர் கோரிக்கைவிடுத்து வந்தனர். கிறிஸ்தவ நாடாரான ஆஸ்டின் கடந்தமுறை கன்னியாகுமரியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டபோது, சொந்த கட்சி நிர்வாகிகளே எதிராக வேலை செய்ததால் அவர் தோல்வி அடைந்தார்.
அது குறித்து சில நிர்வாகிகள் மீதான குற்றச்சாட்டு தலைமை வரை சென்றது. இந்த நிலையில் அங்கு இந்து நாடார் வேட்பாளரை நிறுத்த வேண்டும் எனச் சிலரது பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டன.
அப்போது அதில் சில பெயர்கள் கடந்தமுறை ஆஸ்டினுக்கு எதிராக வேலை செய்ததாகக்கூறி ரிஜெக்ட் ஆகின. எனவே கிழக்கு மாவட்டச் செயலாளராக இருக்கும் மேயர் மகேஷ் இந்து நாடார் என்பதால் அவரது பெயர் டிக் ஆனது.
வேட்பாளர் பட்டியல் தயாராகும் முன்பு கடைசி நேரத்தில் தலைமையில் இருந்து, ‘கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுகிறீர்களா?’ எனக்கேட்டு ஒரு போன் மேயர் மகேசுக்கு வந்துள்ளது. ‘தலைவர் சொன்னால் எந்தத் தொகுதியிலும் போட்டியிடுகிறேன்’ என மேயர் மகேஷ் சொல்லியுள்ளார். அதைத்தொடர்ந்தே தலைமை தீர்க்கமான முடிவை எடுத்தது.

நாகர்கோவில் தொகுதியில் மேயர் மகேஷைத் தவிர்த்து முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், முன்னாள் எம்.பி-யும் மாநில மகளிரணி செயலாளருமான ஹெலன் டேவிட்சன் ஆகியோர் சீட் கேட்டனர். கடந்தமுறை பா.ஜ.க-விடம் நாகர்கோவிலைப் பறிகொடுத்ததுபோன்று இந்தமுறை இழந்துவிடக்கூடாது என்பதால் தலைமை வேட்பாளர் தேர்வில் எந்தப் பரிந்துரையையும் ஏற்கவில்லை.
அந்தச் சமயத்தில்தான் நாகர்கோவிலில் கடந்த தேர்தல் வரலாற்றில் அதிகமாக கிறிஸ்தவ வேட்பாளர்கள் வென்றுள்ளதாக புள்ளிவிபரங்களை முதல்வர் பார்வைக்குச் சிலர் கொண்டுசென்றனர்.
அந்தச் சமயத்தில், ”ஏற்கனவே நான் நாகர்கோவிலில் வென்று எம்.எல்.ஏ-வாக இருந்துள்ளேன்” என ஆஸ்டின் முதல்வரிடம் கூறி சீட் கேட்டுள்ளார். சில கணக்குகள் ஒத்துவரவே முதல்வர் ஓகே சொல்லிவிட்டார்” என்றனர்.