'திமுக வெற்றி பெற்றாலும், ஸ்டாலின் முதலமைச்சராக மாட்டார்' – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சவால்

Spread the love

கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று (09-04-2026) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டிற்கு என தனி பெருமிதம் உள்ளது. ஒரே குடும்பத்தால் நடத்தப்பட்டு வந்த தி.மு.க. அரசு, ஊழல், மோசமான நிர்வாகம் ஆகியவற்றின் மூலம் தமிழ்நாட்டை பின்நோக்கி கொண்டு சென்றுள்ளது. போதைப் பொருள்களால் இளைஞர் சமூகம் சீரழிந்துள்ளது. டாஸ்மாக், அரசு வேலைக்கு லஞ்சம் ஆகியவற்றின் காரணமாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் காலத்தில் இருந்தது போலில்லாமல் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்த அரசு யூடியூபர்கள், சோசியல் மீடியா ஆகியவற்றின் உதவிகொண்டு இயங்குகிறது. தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை நிறுத்திவைத்து மிரட்டி, உண்மைகளை வெளிவராமல் செய்துவிட்டனர். ரூ. 1,000 கோடி மதிப்பிலான ஆழியார் கூட்டு குடிநீர் திட்டம், உக்கடம் குளம் மேம்பாடு ஆகியவை செயல்படுத்தப்படவில்லை. 75 சதவிகித வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை நாடு முழுவதும் உள்ள என்.டி.ஏ கூட்டணி அரசுகள் குறைத்துள்ளன. ஆனால் திமுக அரசு அதனைச் செயல்படுத்தவில்லை. இந்தியாவிலேயே மிகவும் மோசமாக, கடன் வாங்குவதின் மூலம் தமிழ்நாடு சீரழிந்துள்ளது.

பியூஷ் கோயல்
பியூஷ் கோயல்

தி.மு.க அரசு 28 ஆயிரம் எஸ்.சி, எஸ்.டி ஊழியர்களின் ஓய்வூதிய பணத்தை கையாடல் செய்துள்ளது. ஸ்டாலின் குடும்பத்தினரிடம் இந்த தொகை எங்கு சென்றது என நான் கேள்வி எழுப்புகிறேன். மணல், மது மாஃபியாக்கள் நாட்டை வழிநடத்துகின்றனர். உதயநிதியின் பேச்சுக்களுக்காக வன்மையாக கண்டிக்கிறேன். இந்த தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால், உதயநிதியை முதலமைச்சராக்குவார்கள். நான் சவால் விடுகிறேன். ஸ்டாலின் இந்த முறை மீண்டும் முதலமைச்சர் ஆகமாட்டார். என்.டி.ஏ. கூட்டணி, நிச்சயம் நாட்டிற்கு நல்லதை ஏற்படுத்தும்.

பியூஸ் கோயால்
பியூஸ் கோயால்

கோவை மக்கள், 23ம் தேதி என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். திமுக அரசு, கோவை மெட்ரோ தொடர்பான முழுமையடையாத அறிக்கையை அனுப்பினார்கள். வளர்ச்சிக்கு எதிரான நிலையைத்தான் திமுக எப்போது எடுக்கும். தேர்தல் ஆணையம் தன்னாட்சி பெற்ற ஓர் அமைப்பு. திமுக, காங்கிரஸ் கூட்டணி பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீட்டை எதிர்கிறார்களா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். தேர்தல் வந்ததும் உதயநிதி ஸ்டாலின் கோயில்களுக்குச் செல்லத் துவங்கிவிட்டார். இதுதான் அவர்களது தேர்தல் கால இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது. கோயிலில் இருந்து வெளியே வந்ததும் திருநீரை உதயநிதி அழித்தால், அதேபோல் மக்கள் அவர்களை நிராகரிப்பார்கள்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *