விழுப்புரத்தில் ஆரம்பித்து புதுச்சேரி, வேலூர், சேலம், திண்டுக்கல்,கோவை, மதுரை, மற்றும் திருநெல்வேலியை அடுத்து திருச்சியில், சக்தி மசாலா வழங்கும் அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் – சீசன் 3 நிகழ்ச்சி இன்று (மார்ச் 7, சனிக்கிழமை) உற்காசகத்துடன் தொடங்கியது. திருச்சி பால்பண்ணை அருகில் உள்ள வரகனேரி ஹோட்டல் பத்மாவதியில் போட்டி நடைபெறுகிறது. சோஷியல் மீடியா பிரபலம் செஃப் தீனா போட்டியின் நடுவராக செயல்படுகிறார்.

“என் மனைவியின் சொந்த ஊர் திருச்சி. அதனால், திருச்சி என்னுடைய இரண்டாவது சொந்த ஊரைப் போன்றது. திருமணத்துக்குப் பிறகு மாதத்துக்கு ஒருமுறையாவது திருச்சிக்கு வந்துவிடுவேன். 20 வருடமாக சமையல் துறையில் முழுமையாக இருந்தாலும், கடந்த ஆறு ஆண்டுகளாக உணவு குறித்த தேடல் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஊரின் அடையாள உணவுகளைக் கண்டுபிடிக்க, அவற்றின் பாரம்பரியத்யத்தை மீட்டெடுக்க இந்த நிகழ்ச்சி பெரிதும் உதவுகிறது.
பொதுவாக வீடாக இருந்தாலும், ஹோட்டலாக இருந்தால் உணவை சமைப்பவர்களுக்கு அதற்கான அங்கீகாரம் பல நேரங்களில் கிடைப்பதில்லை. அதற்கான அங்கீகாரம் கிடைக்கும்போது அன்பும், அமைதியும் அதிகமாகும். அதன் தாக்கம் சமையலிலும் பாசிட்டிவாக எதிரொலிக்கும். போட்டியில் பங்கேற்பவர்கள் உணவுகளுடன் அதன் நன்மைகளையும் எடுத்துச் சொல்கின்றனர். இதனால் நாம் மறந்த பல்வேறு ஆரோக்கிய உணவுகளை மீண்டும் மீட்டுக்கொண்டு வர முடிகிறது” என்றார்.

இந்தப் போட்டியில் திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சமையல் திறமையாளர்களுடன் புதுக்கோட்டை, தஞ்சாவூர் என திருச்சியைச் சுற்றி உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். எட்டாவது படிக்கும் மாணவரில் ஆரம்பித்து, பல்வேறு வயதினரும் போட்டியில் கலந்துகொண்டு பல்வேறு உணவு வகைகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.
பூசணி அவியல், வஜ்ரவல்லி லட்டு, முருங்கைப் பூ வெங்காய பகோடா, ஆவாரம்பூ பைட்ஸ் போன்ற சைவ உணவுகளும், இறால் வடை, பால் சுறா தொக்கு போன்ற அசைவ உணவுகளும், புளி வெல்லம் சுக்கு பானகம், போன்ற பாரம்பரிய உணவுகளும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. இவற்றுடன் பர்மா நாட்டு உணவுகள், இன்றைய ட்ரெண்டில் உள்ள பிரௌனி வகைகளும் போட்டியில் பங்கேற்றுள்ளன. செஃப் தீனா உணவுகளை சுவை பார்த்து மதிப்பெண் வழங்கி வருகிறார்.

நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களை உற்சாகப்படுத்த அரங்கில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் தேர்வு செய்யப்படும் போட்டியாளர்கள், அடுத்ததாக, நேரடி சமையல் சுற்றில் பங்கேற்பார்கள். நேரடி சமையல் சுற்றின் வெற்றியாளர்கள் சென்னையில் மார்ச் 29-ம் தேதி சென்னையில் மாபெரும் இறுதிப் போட்டியில் பங்கேற்பார்கள்.