தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி விவசாயிகளுக்கு எதிராகவேதான் கடந்த 5 ஆண்டுகளாக உள்ளது. தி.மு.க, விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. வருகிற தேர்தலில் தி.மு.க-விற்கு வாக்களிப்பதை விரும்பவில்லை. தி.மு.க-விற்கு வாக்களிப்பது தற்கொலைக்கு சமம். 38 கோரிக்கைகள் எந்த அரசியல் கட்சி ஏற்றுக் கொள்கிறதோ, அது குறித்து அலசி ஆராய்ந்த பின்பு முடிவெடுக்கப்படும். வரும் மார்ச் 31- ம் தேதி திருச்சியில் மாநாடு நடத்துவது என முடிவெடுத்துள்ளோம்.

அந்த மாநாட்டில் யாருக்கு ஆதரவு கொடுப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும். தி.மு.க மீது நம்பிக்கை இழந்துவிட்டோம். விவசாயிகளுக்கு தி.மு.க அரசு எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை. தி.மு.க அரசு விவசாய விரோத சட்டம் கொண்டு வந்துள்ளது. விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டு உள்ளது. எனவே, வரும் சட்ட மன்ற தேர்தலில் விவசாயிகள் தி.மு.க-விற்கு வாக்களிக்க மாட்டோம். தமிழகத்தில் 60-க்கும் மேற்பட்ட விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். எந்த கட்சி விவசாயிகளுக்கு நம்பிக்கையாக இருக்கிறது என்பதை ஆய்வு செய்து அந்த கட்சிக்கு ஆதரவு தர தயங்க மாட்டோம்” என்றார்.