மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) மூத்த தலைவர்களான ஆர். உமநாத் மற்றும் பாப்பா உமநாத் ஆகியோரின் இளைய மகள் உ.நிர்மலாராணி. CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் உ.வாசுகி அவர்களின் தங்கை, திருச்சி மூத்த வழக்கறிஞர் C.K.ராஜ்குமார் அவர்களின் இணையருமான இவர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வந்தார் நிர்மலாராணி. அதோடு, வழக்கறிஞராகவும், சமூக செயற்பாட்டாளராகவும் இயங்கி வந்தார். இந்நிலையில், நலமுடன் இருந்த இவர், திடீரென்று ஹார்ட் அட்டாக் ஏற்பட்டது இயற்கை எய்தியிருக்கிறார். தில்லை நகரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிச்சடங்கு முடிந்திருக்கிறது.
அவரது மறைவு குறித்து தோழர் ஒருவர் செய்துள்ள பதிவில்,

‘தோழர் உ.நிர்மலாராணி எனக்கு இந்திய மாணவர் சங்கத்தின் சிதம்பரம் மாநில மாநாட்டின்போது அறிமுகமானவர். நான் தேன்கனிக்கோட்டையில் பணியாற்றிய 1984-86 காலகட்டத்தில் அவர் ஜூனியர் விகடன் மாணவ நிருபர் என்ற முறையில் அங்கு வந்திருந்தார்.
கோலட்டியில் இயங்கிவந்த மிகப் பெரிய பட்டுவளர்ப்புப்பண்ணை பற்றிய செய்தி சேகரிப்புக்காக கமலா முருகன் என்ற தோழருடன் வந்திருந்த அவருடன் தேன்கனிக்கோட்டையில் இருந்து நானும் சென்றிருந்தேன். பிற்பகலில் பண்ணையில் இருந்து திரும்பிய நாங்கள், சாப்பிட்டுவிட்டு ஓட்டலில் இருந்து வெளியே வந்தபோது லாரி ஒன்று வனத்துறை சோதனைச்சாவடியில் கட்டப்பட்டிருந்த கனத்த தடுப்புச் சங்கிலியைத் தலைதெறிக்கும் வேகத்தில் அறுத்துக்கொண்டு எங்களைக் கடந்து பாய்ந்தது.
தெறித்த சங்கிலித்துண்டு ஒன்று எங்களுக்கு சில அடிகள் தூரத்தில் வந்து விழுந்தது. சிலநொடிகள் முந்தி இருந்தாலும் எங்களில் யாராவது ஒருவர் கடுமையாக காயமடைந்து இருக்கக்கூடும். அந்தச் சங்கிலித்துண்டு வந்த வேகத்தில் பட்டிருந்தால் என்னவாகியிருப்போம் என்கிற அதிர்ச்சியிலிருந்து மீளவே எங்களுக்கு கொஞ்சம் நேரமெடுத்தது. அன்றைக்கு தப்பித்தது பெரிய விசயம்தான். ஆனால், சற்றுமுன் அவர் இறந்துவிட்டதாக செய்தி வருகிறது. இவ்வளவு சீக்கிரத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிலை எனக்கு வாய்த்திருக்கக்கூடாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அவரைப்பற்றி கவிவர்மன்,
“தமிழகத்தில் உள்ள லீடிங் லாயரில் ஒருவர் நிர்மலாராணி தோழர். சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதியாக கடந்த வருடம் தேர்வாக இருந்து கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பு போனது. மறுபடியும் அவர் நீதிபதியாக அத்தனை வாய்ப்புகளும் இருந்த நிலையில், திடீரென்று தோழர் மறைந்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இவரது தந்தைதான் திருச்சி காட்டூர் பகுதியில் சமத்துவ சுடுகாடு அமைய பெரும் முயற்சி எடுத்தவர். 64 வயது ஆகிறது. சட்டப் போராளியாகவும், சமூக ஆய்வாளராகவும் திகழ்ந்த அவரது மறைவு தமிழக முற்போக்கு இயக்கங்களுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. தோழர் மறைவெய்திருப்பது தாங்கமுடியாத இழப்பு” என்றார்.