கோயிலின் முகப்பில், ஆதிசேஷன் மீது சயனநிலையில் மகாலட்சுமி சமேதராக அருளும் திருமால், ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர் ஆகியோர் காட்சி தருகின்றனர். கோயிலுக்கு உள்ளே சென்றதும் ஒரு கையை உயர்த்தி நம்மை ஆசீர்வதிக்கும் ஆஞ்சநேயரைத் தரிசிக்கலாம். அவருக்கு அருகிலேயே விநாயகரும் காட்சி தருவது கூடுதல் விசேஷம்.

கிழக்கு நோக்கிய திருக்கோயில், கோயிலின் நுழைவு வாயிலில் இடப்புறம் காவல் தெய்வமான ராஜகருப்புசாமி எழுந்தருளி அனைவரையும் காத்து வருகிறார். கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், முன்மண்டபம் என்ற அமைப்புடன் பெருமாள் சந்நிதி விளங்குகிறது.
கருவறையில் குழலூதும் நிலையில், திருவாயில் வெண்ணெயுடன் ருக்மிணி – சத்யபாமா சமேதராக, நின்ற கோலத்தில் காட்சி தருகிறார் வேணுகோபால சுவாமி. இவரை செங்கணிவாய்ப்பெருமாள் என்றும் பக்தர்கள் போற்றுகிறார்கள்.
சுவாமி சந்நிதிக்கு எதிரில் கருடாழ்வார் தனிச் சந்நிதியில் காட்சி தருகிறார். தாயார் ஸ்ரீஅரவிந்த நாயகி என்னும் திருப்பெயர் கொண்டு தனிச் சந்நிதியில் காட்சி தருகிறார். பிராகாரத்தில் ஸ்ரீநம்மாழ்வார், ஸ்ரீராமாநுஜர், ஸ்ரீசேனைமுதல்வர் ஆகியோருக்கும் சந்நிதிகள் அமைந்துள்ளன.