குழந்தைகள் அல்லது பெரியவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு அல்லது வற்புறுத்தலின் பேரில் பாலின மாற்ற அறுவை சிகிச்சைக்கோ அல்லது திருநங்கை அடையாளத்தை ஏற்பதற்கோ உள்ளாக்கப்படுவதைத் தடுக்கவே இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது.” என்றார்.
இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய திருநர் கவுன்சிலின் (NCTP) உறுப்பினர்களான கல்கி சுப்பிரமணியம், ரிதுபர்ணா நியோக் ஆகியோர் மார்ச் 26 அன்று தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். தொடர்ந்து சமூக ஆர்வலர்களும் எதிர்ப்புகளைப் பதிவுசெய்து வருகின்றனர்.
இந்த நிலையில், மசோதாவில் இருக்கும் சிக்கல் குறித்து விரிவாகப் பேச திருநர் சமூகச் செயல்பாட்டாளரும், நடிகையுமான நேஹாவிடம் பேசினோம்.
“ஒருவர் தன்னைத் திருநங்கை என்று அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றால், அதற்கு ஒரு மருத்துவக் குழுவின் சான்றிதழ் கட்டாயம் என்பது அடிப்படை மனித உரிமை மீறல். ஓர் ஆணோ, பெண்ணோ தங்களை நிரூபிக்க இப்படி உடல் ரீதியான சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுவதில்லை. ஆனால், திருநங்கைகளை மட்டும் அவர்களின் உறுப்புகளைப் பரிசோதித்துச் சான்றிதழ் வழங்குவது என்பது மிகப்பெரிய அவமானம். ‘சுய-அடையாளம்’ என்பது மனரீதியானது, அது உடல் உறுப்பு சார்ந்தது மட்டுமல்ல என்பதை இந்த அரசு உணர்வதே இல்லை.