திருநெல்வேலி: கல்லூரி மாணவரால் கண்டெடுக்கப்பட்ட பழைமைவாய்ந்த புதைப்பொருள்கள்!

Spread the love

திருநெல்வேலியில் உள்ள மானூரில் மன்னர் காலக் கல்வெட்டுகள் பலவும் கிடைக்கின்றன. இதனால் ஆய்வாளர்கள் அங்கு அடிக்கடி சென்று கள ஆய்வு செய்து வருகின்றனர்.

சமீபத்தில் மேற்கு செழியநல்லூரில் 450 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டுகள் மற்றும் பீரங்கிக் குண்டுகள் போன்ற பொருள்களை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரித்விராஜ் என்கின்ற தொல்லியல் துறை மாணவர், தொல்லியல் துறை உதவிப் பேராசிரியர் மதிவாணன், முருகன் மற்றும் தொல்லியலாளர் மீனா ஆகியோர் கண்டெடுத்தனர்.

கல்வெட்டை வாசித்து ஆய்வு செய்தபோது, 450 ஆண்டுகள் பழமையானது என்று உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் மதிவாணன்,

“நாங்கள் கள ஆய்வு செய்தபோது இரண்டு சதிகற்கள் கிடைத்தன. ஒன்று மண்ணில் புதைந்தும், மற்றொன்று வெளியே சற்று தெரியும் படியாகவும் அமைந்திருந்தது. அதில் ஒன்று பாதியாக உடைந்திருந்தது. ஊர் மக்களிடம் அது குறித்துக் கேட்டபோது அவற்றை வைத்து வழிபாடு செய்வதாகக் கூறினர். அந்தச் சதிகற்கள் 300 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஊர் மக்கள் அங்கு ஐந்து கற்கள் இருந்ததாகக் கூறினர். ஆனால் இரண்டு மட்டுமே எங்களுக்குக் கிடைத்தன.

உள்ளூர் மக்கள் அங்கு ஒரு கல்வெட்டு இருப்பதாகவும் கூறினர். உடனே சென்று பார்க்கும் போது அங்கு ஒரு தூண் கல்வெட்டு இருந்தது. அந்தக் கல்வெட்டில் சங்கு, சக்கரம் பொறிக்கப்பட்டிருந்தது. முக்கியமாக ‘புறவரி’, ‘திருவிடையாட்டம்’ போன்ற வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன. இவை அனைத்தும் பெருமாள் கோயில்களுக்குத் தானம் கொடுத்ததைக் குறிக்கின்ற பெயர்கள்.

அங்குள்ள மக்கள் அங்கு ஒரு கோயில் இருந்ததாகவும், அது மெல்ல இடிபட்டு அழிந்து போனதாகவும் கூறுகின்றனர். கோயில்களுக்கு உரிய பொருட்களாகக்கூட அவை இருந்திருக்கலாம். மேலும் இரண்டு கிரானைட் தொட்டிகள் கிடைத்தன. அவைகூட ஒருவேளை சாமியாகப் பார்க்கப்பட்டிருக்கலாம்.

மேலும் உள்ளூருக்குள் செல்லச் செல்ல பீரங்கிக் குண்டுகள் கிடைத்தன. கட்டடங்கள் கட்டும்போது அவை மக்களுக்குக் கிடைத்ததாகக் கூறினர். அவை அனைத்தும் கருங்கல்லால் ஆனவை. அவற்றைக்கொண்டு சிறுவர்கள் விளையாடியதாகவும் அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.

அவற்றைக் கேள்விப்பட்டு நான் சென்று பார்த்தபோது எனக்கும் ஒரு மூன்று, நான்கு பீரங்கிக் குண்டுகள் கிடைத்தன. பீரங்கிக் குண்டு 250 ஆண்டுகள் பழைமையானது. பிரித்விராஜ் கள ஆய்வு செய்யும்பொழுது இந்த இடங்களைப் பார்த்திருக்கிறார். பிறகு நாங்களும் அங்கு சென்று களஆய்வு செய்யும்போது இவை அனைத்தும் கிடைத்தன. பேராசிரியர் சுதாகர் அவர்களும் எங்கள் ஆய்வுக்கு உதவியாக இருந்தார்” என்று கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *