கும்பகோணம் – மயிலாடுதுறை வழியில், கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது திருபுவனம். இங்குள்ள சரபேஸ்வரர் சந்நிதி மிகவும் மகிமை வாய்ந்தது. ஏழரை அடி உயரம் கொண்டு கம்பீரமாக பிரமாண்டத் திருமேனியோடு அருள்கிறார் சரபேஸ்வரர். பிரத்யங்கரா, சூலினி எனும் இரு மஹாசக்திகளை இறக்கைகளாகக் கொண்ட சரபர் மகாவல்லமை கொண்டவர்.
இங்கு வந்து வேண்டிக்கொண்டாலே பகை விலகும். மனபயம் நீங்கும். நோய்கள் விலகி ஆரோக்கியம் பெருகும் என்பார்கள். அப்படிப்பட்ட சரபேஸ்வரர் திருக்கோயில் தருமை ஆதினத்துக்கு சொந்தமானது. புகழ்பெற்ற இந்த ஆலயத்தில் கொடிமரம் நேற்று சாய்ந்தது. இந்த நிகழ்வு பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொதுவாக கொடிமரம், கோபுரம், கோயில் யானை, கோயில் பசு ஆகியன மங்கலச் சின்னங்களாகக் கருதப்படுபவை. இவற்றுக்கு பாதிப்பு ஏற்பட்டால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுமோ என்கிற அச்சம் பக்தர்களிடையே எழும். அதிலும் கொடிமரம் என்பது ஒரு கோயிலில் மிக முக்கியமான அங்கமாகக் கருதப்படுவது. கோயிலில் உற்சவங்கள் என எதுநடந்தாலும் அது கொடிமரத்தில் இருந்துதான் தொடங்கும். அப்படிப்பட்ட கொடிமரம் சாய்வது என்பது தீய சகுனமாயிற்றே என்று அஞ்சுகிறார்கள் பக்தர்கள்.

திருபுவனம் சரபேஸ்வரர் கோயில் கொடிமரம் சாய்ந்ததை அடுத்து பக்தர்கள் பதற்றம் அடைந்தனர். சமூக ஊடகங்களிலும் இது பேசுபொருளானது. பெரும் தீமை ஒன்று நடக்க இருப்பதற்கான அறிகுறி என்று கருத்துகள் பதிவிடப்பட்டன. இந்நிலையில் கொடிமரம் சாய்ந்த விவகாரம் தொடர்பாக நடந்தது என்ன என்பது குறித்து தருமை ஆதீன நிர்வாகிகளிடம் தொடர்பு கொண்டு கேட்டோம்.
“தருமை ஆதீனத்துக்கு உட்பட்ட சரபேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள கொடிமரம் எதிர்பாராத விதமாக சாய்ந்துள்ள நிகழ்வு வருத்தம் அளிக்கிறது. இது குறித்து, பக்தர்கள் யாரும் தேவையற்ற பயமோ அல்லது அச்சமோ கொள்ள வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இது குறித்த சில தகவல்களையும் உங்கள் முன் வைக்கக் கடமைப்பட்டுள்ளோம். கொடிமரம் நீண்ட காலப் பயன்பாடு, தட்பவெப்ப நிலை மாற்றம் அல்லது மரத்தின் உறுதித்தன்மை குறைவு போன்ற காரணங்களாலேயே இது நிகழ்ந்துள்ளது. இது முற்றிலும் ஒரு தற்செயலான நிகழ்வு. மேலே உள்ள கவசத்தில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக முன்னர் பெய்த கனமழையில் தண்ணீர் புகுந்து மரத்தினை சேதப்படுத்தி உள்ளது.
இறையருளால் கொடி மரம் சாய்ந்தபோது யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தருமை ஆதீன 27 வது குருமூர்த்திகள் உடனடியாக அந்த இடத்திற்குச் சென்று துரித நடவடிக்கை எடுக்க ஆலோசனை வழங்கினார். மேலும் கொடிமரம் சாய்ந்ததை முன்னிட்டு உடனடியாக பிராய்சித்த ஹோமம் செய்து வழிபாடு நடத்தினார்கள். தற்போது அந்தப் பகுதி பாதுகாப்பாக மாற்றப்பட்டு, சீரமைப்புப் பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட்டுள்ளன.

கொடிமரம் சாய்ந்த விவகாரத்தில் ஆகம விதிப்படி தீர்வு எட்டப்பட உள்ளது. பழைய கொடி மரத்தை அகற்றுவதும், புதிய கொடி மரம் பிரதிஷ்டை செய்வதும் ஆகம விதிகளின்படி முறையாகச் செய்யப்படும். இதற்காகத் தகுந்த ஆன்மிகப் பெரியவர்கள் மற்றும் ஸ்தபதிகளின் ஆலோசனை பெறப்பட்டு இன்று அதற்கான வேலையும் தொடங்கப்பட்டுவிட்டது.
சுவாமிக்கு நடைபெறும் நித்ய கால பூஜைகளுக்கும், இந்த நிகழ்விற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என ஆகம வல்லுநர்கள் கூறியுள்ளனர். எனவே, பக்தர்கள் எப்போதும் போலத் தடையின்றி வந்து சுவாமி தரிசனம் செய்யலாம். சுவாமிக்கு நடைபெற வேண்டிய பூஜைகளும் சிறப்புற நடைபெற்று வருகின்றன.
இறைவனின் அருள் எப்போதும் நம் அனைவரையும் காக்கும். தெய்வ காரியங்களில் சிறு இடையூறுகள் ஏற்படுவது இயல்பே; அதை முறையாகச் சரி செய்வது நமது கடமை. எனவே, வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், அனைவரும் அமைதி காக்குமாறும் பிராத்தனை செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

விரைவில் புதிய கொடி மரம் கம்பீரமாக அமையப் பெறும். சாய்ந்த கொடிமரம் கலாகர்ஷணம் செய்தது புதியமரம் பொருத்த பங்குனி 2 (16-3-2026) நாள் குறிக்கப்பட்டுள்ளது அந்த நாளில் அதற்கு சிறப்பு கும்பாபிஷேம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தருமை ஆதீனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.