புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றானது திருப்பரங்குன்றம். அதன் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்திருநாள் அன்று தீபம் ஏற்றிட அனுமதி அளித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் உத்தரவிட்டார்.
வழக்கு தொடர்ந்த ராம ரவிக்குமார் உட்பட 10 பேர் தீபத்தூணில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்தத் தீர்ப்பு திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் சாதகமான தீர்ப்பு என்றே கருத வேண்டும். எனவே, இதில் கோயிலுக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. கடந்த டிசம்பர் 1ஆம் தேதி தீர்ப்பு வழங்கியவுடன், அரசுக்கு இதில் மாற்றுக் கருத்து இருந்தபட்சத்தில், உடனடியாக அன்றே இரு நீதிபதிகள் அடங்கிய அமர்விற்கு அல்லது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கலாம்.

அதை விடுத்து கோயில் நிர்வாக அதிகாரியை வைத்து முறையீடு செய்ததும், நீதிமன்ற விசாரணையின்போது அவர் பின்வாங்கியதும் புதிராக உள்ளது.
மேலும் மேல்முறையீடு செய்வதென்றால் அங்குள்ள தர்கா நிர்வாகம்தான் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்களும் எதிர்ப்பைத் தெரிவிக்காத நிலையில் நீதிமன்ற உத்தரவை ஏற்று தீபத்தூணில் தீபம் ஏற்றி இருந்தால் பிரச்னை பெரிதாக எதுவும் எழுந்திருக்க வாய்ப்பில்லை.