திருப்பரங்குன்றம் தீபத்தூண் : தமிழக அரசின் மனு தள்ளுபடி : மதுரை உயர்நீதிமன்ற அமர்வு  – Kumudam

Spread the love

அரசுத் தரப்பின் குற்றச்சாட்டு

தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அளித்த உத்தரவால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டதாகத் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கவில்லை என்றும், நாங்கள் மேல்முறையீடு செய்யத் தயாராகி வந்தோம் என்றும் வாதிடப்பட்டது. மேலும், உயர் நீதிமன்றப் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் (CISF) பாதுகாப்போடு மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்ற மனுதாரருக்கு அனுமதி வழங்கப்பட்டது சட்டவிரோதமானது என்றும் அரசுத் தரப்பு வாதிட்டது.

மனுதாரர் தரப்பின் வாதம் 

மனுதாரர் தரப்பில், தனி நீதிபதி உரிய விசாரணை நடத்தி தான் தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ளார் என்றும், ஆனால், கோவில் நிர்வாகம், காவல்துறை நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றப் பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்பட்டபோதிலும், திடீரென 144 தடை உத்தரவைப் பிறப்பித்தனர் என்றும் மனுதாரர் தரப்பு வாதிட்டது.

இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பு மற்றும் கருத்துகள்

இந்த வழக்கில் வாதம் முடிந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கில் இன்று மாலை 4 மணியளவில் தீர்ப்பளித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, பின்வரும் கருத்துக்களைத் தெரிவித்தது: “மாநில அரசு கடமையைச் செய்யத் தவறியதால்தான் சிஐஎஸ்எஃப் பாதுகாப்புக்குத் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.” மேலும், “அரசு ஏதோ நோக்கத்துடன் இந்த வழக்கை தொடர்ந்துள்ளது” என்றும், “வழக்கை மீண்டும் ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரிப்பார்” என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேற்கண்ட கருத்துக்களைத் தெரிவித்ததோடு, தமிழக அரசு தரப்பின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *