1949ல் குழந்தை ராமர் விக்ரகத்தை எடுக்க மறுத்த கே.கே. நாயர் பின்னர் ஜன சங்கத்தின் எம்.எல்.ஏ.,வாகவும், எம்.பி.யாகவும் இருந்தார் என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. பிறகு, பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இடித்தவர்களில் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை.
இதேபோன்று தான் 1991ம் ஆண்டு வழிபாட்டு தலங்கள் பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. அப்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த அயோத்திப் பிரச்சனை தவிர அனைத்து வழிபாட்டு தலங்களும் இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 ஆகஸ்ட் 15ந் தேதி என்ன நிலையில் இருந்ததோ அதுதான் நீடிக்கும் என்று நாடாளுமன்றம் சட்டம் இயற்றியது.
தலைமை நீதிபதியாக பணியாற்றிய டி.ஒய். சந்திரசூட் அதற்கு புது வியாக்கியானம் கொடுத்தார். மாற்றக் கூடாது என்று தான் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர ஆய்வு செய்யக் கூடாது என்று சொல்லப்படவில்லை. எனவே, ஆய்வுகள் நடத்தலாம் என்று சொன்னார். ஞானவாபியை தோண்ட ஆரம்பித்தார்கள், சம்பல் மசூதியை தோண்ட ஆரம்பித்தார்கள் குறைந்தபட்சம் 5 பேர் கொல்லப்பட்டார்கள்.

இப்படி ஏராளமான உதாரணங்கள் இருக்கிறது. சங்பரிவாரின் வழிமுறையே இதுதான். ஒரு இடத்தை பிரச்சனைக்கு உள்ளாக்குவார்கள், தங்களுக்கு பொருத்தமான நீதிபதியோ, அதிகாரியோ வந்ததும் அந்த இடத்தை தாங்கள் சொல்வது போன்று மாற்றுவார்கள். பிறகு, அதையே ஆதாரம் என்பார்கள். இப்போதும் திருப்பரங்குன்றத்தில் அவர்கள் அதைத்தான் தொடங்கியிருக்கிறார்கள்.
திருப்பரங்குன்றம் மட்டுமல்ல; திண்டுக்கல் மாவட்டம், பெருமாள்பட்டி, அபிராமியம்மன் கோவில் என்று தொடர ஆரம்பித்திருக்கிறார்கள். எனவே தான் தூக்கிலா போடச் சொன்னேன், இடிக்கவா சொன்னேன் என்பதெல்லாம் நடப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்கிற காரணத்தினால் தான் தமிழ்நாடு அரசு உறுதியாகவும், சரியாகவும் இந்த நிலைபாட்டை எடுத்திருக்கிறது. அதற்காக தமிழக அரசு பாராட்டப்பட வேண்டும்.