திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல முயன்ற வேலூர் இப்ராஹிம் கைது | Vellore Ibrahim arrested for attempting to reach Thiruparankundram hill

1348361.jpg
Spread the love

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல முயன்ற பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிமை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவரை விடுவிக்கக் கோரியும், போலீஸாரைக் கண்டித்தும் பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள பள்ளிவாசலில் வழிபாடு செய்வதற்காக, பாஜக சிறுபான்மையினர் அணி தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் நேற்று மதுரை வந்தார். ஜெய்ஹிந்த்புரத்தில் தனியார் விடுதியில் தங்கியிருந்த அவரை, மலைக்குச் செல்லக்கூடாது என்று போலீஸார் தடை விதித்தனர். இதனால், போலீஸாருக்கும், பாஜகவினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அங்கு பணியில் இருந்த காவல் உதவி ஆணையர் சூரக்குமாரிடம், மலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று பாஜகவினர் வலியுறுத்தினர். இந்நிலையில், வேலூர் இப்ராஹிமை போலீஸார் கைது செய்தனர். அவரை விடுவிக்கக் கோரி பாஜகவினர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து, பாஜகவைச் சேர்ந்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், வேலூர் இப்ராஹிமை உடனடியாக விடுவிக்கக் கோரியும் ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலைய வாயிலில் அமர்ந்து பாஜகவினர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி, அங்கிருந்து கலைந்துபோகச் செய்தனர். இதனால் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *