இந்த ஆலயத்தில் ஸ்ரீவியாசராயர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஸ்ரீஜெயவீர ஆஞ்சநேயர், வாலின் நுனியில் மணியுடன், ஒரு கரத்தில் சௌகந்திகா மலரை ஏந்தியபடியும், ஒரு கரத்தில் பக்தர்களுக்கு வரம் அளிக்கும் வர ஹஸ்தமும் காட்டி அருள்கிறார்.
இத்திருக்கோயிலில் பெரிய திருவடி என்று அழைக்கப்படும் பெரிய கருடன் சந்நிதியும் அமைந்திருக்கிறது. 11 நாகங்கள் கருடனின் உடலைச் சூழ்ந்திருக்க, தன் இரண்டு கரங்களால் நாகர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெரிய கருடனை, பஞ்சமி தினத்தில் வழிபட்டால் நாகதோஷம் நீங்கி, திருமண வரம் கிட்டும் என்பது நம்பிக்கை.
இத்திருக்கோயிலில் அமைந்திருக்கும் கிணறு, 10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகவும் பழைமை வாய்ந்ததாகும். வீரசோழன் கலிமூர்க்கன் என்ற அரசன் இத்திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் தாகம் தீர்க்க, மிகப் பெரிய இந்தக் கிணற்றைக் கட்டியிருக்கிறார். இன்றளவும் இத்திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்தக் கிணற்று நீரைப் புனிதத் தீர்த்தமாகவே பருகி வருகிறார்கள்.

இத்திருக்கோயிலில் ஸ்ரீராமாநுஜர் ஜயந்தி, லட்சார்ச்சனை, வைகுண்ட ஏகாதசி, கோகுலாஷ்டமி, மகர சங்கராந்தி, ஆடிப் பெருக்கு, தமிழ் வருடப் பிறப்பு போன்ற முக்கிய விழாக்கள் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன.
ஸ்ரீவிண்ணளந்த பெருமாளைத் தரிசித்து வழிபட்டால், நம் மனதில் இருக்கும் அகந்தையை ஒடுக்கி, பல நன்மைகளை நமக்கு அருள்வார். எனவே வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை கொடுவாய் சென்று பெருமாளைத் தரிசனம் செய்து வாருங்கள். திருப்பதி பெருமாளை தரிசனம் செய்த பலனையும் புண்ணியத்தையும் பெற்று மகிழுங்கள்.