பஞ்சபூதங்களையும் இறைவனின் வடிவங்களாகப் பார்த்து வழிபடுவது நம் மரபு. அவற்றைப் பாதுகாக்க வழிபாடுகளே பிரதானமானத் திகழ்ந்தன. குறிப்பாக மலைகளில் இறைச்சந்நிதிகளை அமைத்தும் மலையையே இறைவனாக நினைத்தும் வழிபட்டுவந்தனர் நம் முன்னோர்கள். அப்படிப்பட்ட தலங்களுக்குச் செல்வதே மிகவும் விசேஷம். நம் உடலும் மனமும் உடனே புத்துணர்ச்சி கொள்வதோடு வாழ்விலும் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும். அப்படி ஒரு மலைத்தலம்தான் திருமூர்த்திமலை.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து சுமார் 21 கி.மீ தொலைவில் திருமூர்த்திமலை அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் தோணி நதிக்கரையில் அமணலிங்கேஸ்வரர் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். ‘அமணலிங்கேஸ்வரர்’ என்றால் ‘குற்றமற்ற ஈசன்’ என்று பொருள். ஈசன் அக்னி வடிவானவர். அக்னிக்குள் ஏது குறை அல்லது மாசு. மேலும் அவரை நாடினால் அவர் நம் குறைகளையும் குற்றங்களையும் போக்கித் தூய்மை செய்வார். எனவேதான் அவர் அமணலிங்கேஸ்வரர். அவருக்கு மும்மூர்த்தி ஆண்டவன், திருமூர்த்தி, தெற்குசாமி, கஞ்சிமலையான், தென்கைலாசமூர்த்தி எனப் பல திருநாமங்கள் உண்டு.
அப்படி ஆதியும் அந்தமும் இல்லாத அந்த அருட்பெருஞ்சோதி இங்கே குடைவரைக் கோயிலில் லிங்கரூபமாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

இத்தலம் புராணச் சிறப்பு பெற்றது. அகத்தியருக்கு ஈசன் திருக்கல்யாணக் காட்சி அருளிய மலைகளில் இதுவும் ஒன்று என்கிறார்கள். எனவே இதற்குத் தென்கயிலாயம் என்கிற திருநாமமும் உண்டு.
முன்னொரு காலத்தில் வாழ்ந்த அத்திரி முனிவர், மும்மூர்த்திகளே தனக்குக் குழந்தைகளாகப் பிறக்க வேண்டும் என வேண்டினார். இவரது விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு இவரது மனைவி அனுசூயாவின் முன்பு பிரம்மா, திருமால், சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் தோன்றினர். அனுசூயாவிடம் தங்களுக்கு அன்னமிடும்படிக் கேட்டனர். அனுசூயாதேவி ஒரு செம்பில் தீர்த்தத்தை எடுத்து வந்து அவர்கள் மீது தெளிக்க அம்மூவரும் குழந்தைகளாக மாறினர்.
அக்குழந்தைகள் அங்குள்ள எட்டுக்கால் மண்டபத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களை நோக்கி ஒரு கல் உருண்டு வந்தது. உருண்டு வந்த கல், குழந்தைகள் மீது மோதாதவாறுத் தடுக்க சப்த கன்னியர் ஏழுவரும் ஏழு விரளி மஞ்சளை வைத்து கல்லைத் தடுத்து நிறுத்திக் குழந்தைகளைக் காப்பாற்றினார்.
பிறகு மும்மூர்த்திகளும் அந்தத் தலத்தில் கலியுகம் முடியும் மட்டும் இருந்து அருள் செய்ய அந்தக் கல்லிலேயே ஐக்கியமாயினர் என்கிறது தலவரலாறு. சப்த கன்னியரும் விரளி மஞ்சள்களில் ஐக்கியமாயினர்.

இங்கே பக்தர்கள் சந்தனத்தை மும்மூர்த்திகள் மீதும் எறிந்து வழிபாடு செய்வது ஆச்சர்யமாக இருக்கிறது. காரணம், பக்தர்கள் எறியும் சந்தனம் மும்மூர்த்திகளின் நெற்றியில் விழுந்தால் அவர்கள் நினைத்த காரியம் உடனே நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கோயிலின் அருகில் உள்ள மலையேற்றத்தில் பஞ்சலிங்கங்கள் உள்ளன. அதை ஒட்டியே அருவியும் வீழ்கிறது. இந்தப் பஞ்சலிங்கங்களை இன்றும் அத்திரி முனிவரும் அவரது மனைவி அனுசுயாவும் வழிபட்டு வருவதாக நம்பிக்கை. நீண்ட காலமாகக் குழந்தைப் பேறு இன்றித் தவிக்கும் தம்பதியினர் இந்த அருவியில் நீராடி சப்த கன்னிமார்களை முறையாக வழிபட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை.
மேலும் இத்தலத்தில் உள்ள சுந்தர விநாயகர் மிகவும் சக்தி வாய்ந்தவர். அவரை வழிபட்டாலும் குழந்தை பாக்கியம் கிட்டும் என்கிறார்கள். இங்கு முருகப்பெருமான் தட்சிணாமூர்த்தி ஆகியோரும் சந்நிதி கொண்டு அருள்கின்றனர்.
அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கு முன்பாக 30 அடி உயர தீபகம்பம் அமைந்துள்ளது. இந்த தீபகம்பத்தின் அடியில் எண்திசைகளை நோக்கியவாறு பத்ரகாளி, வனதுர்கை, விசாலாட்சி, ஊர்த்துவத் தாண்டவர், அகோர வீரபத்திரர், ஸ்ரீராமர், ஸ்ரீநரசிம்மர், ஸ்ரீவேணு கோபாலர் சிற்பங்கள் காணப்படுகின்றன.

இங்கு சப்த கன்னியருக்கு விரலி மஞ்சளால் பூஜை செய்தால் நீடித்த மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தத் தலத்தில் ஏராளமான பக்தர்கள் குவிவார்கள். கல்வி, நல்ல வேலை, மன நிம்மதி ஆகியவற்றுக்காகவும் பக்தர்கள் இங்கு வந்து அமணலிங்கேஸ்வரரை வேண்டிச் செல்கிறார்கள் பக்தர்கள். மகா சிவராத்திரி, ஆடி அமாவாசை, மார்கழி திருவாதிரை ஆகிய சிறப்பு நாள்களில் இங்கே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.
இப்படி மனமும் ஆன்மாவும் குளிரச் செய்யும் இந்த மலைத் தலத்துக்கு ஒருமுறை சென்று வாருங்கள். அந்தக் குறையற்ற ஈசனின் கருணையால் வாழ்வில் குறைகள் எல்லாம் நீங்கி வளம் பிறக்கும்.