திருமணம் தாண்டிய உறவுக்கான டேட்டிங் செயலியில் 40 லட்சம் இந்தியர்கள்; முதலிடம்? – தரவுகள் சொல்வதென்ன?

Spread the love

நவீன டிஜிட்டல் யுகத்தில், மனித உறவுகளின் எல்லைகளும் தேடல்களும் பெரும் மாற்றத்திற்கு உள்ளாகிவருகின்றன. ஒரு காலத்தில் சமூகக் கட்டுப்பாடுகளுக்குள் அடங்கியிருந்த தனிப்பட்ட விருப்பங்கள், இன்று தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதிய தளங்களை நோக்கி நகர்கின்றன.

குறிப்பாக, திருமணத்திற்குப் புறம்பான உறவுகளைத் தேடும் செயலிகள் (Extra-marital dating apps) உலக அளவில் ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளன. கிளீடன் (Gleeden) போன்ற செயலிகள் இந்தியாவில் 40 லட்சம் பயனர்களை எட்டியிருப்பது, இந்தத் துறையில் ஏற்பட்டுள்ள ஒரு முக்கியத் திருப்பமாகக் கருதப்படுகிறது.

app
app

உலக அளவில் பல டேட்டிங் செயலிகள் ஆண்களை மையமாகக் கொண்டே இயங்குகின்றன. ஆனால், ‘கிளீடன்’ செயலி பிரான்சில் பெண்களால் தொடங்கப்பட்டது. `பெண்கள் தங்கள் விருப்பங்களை வெளிப்படையாகவும் பாதுகாப்பாகவும் பகிர்ந்து கொள்ள வேண்டும்’ என்ற நோக்கத்தில் இது உருவாக்கப்பட்டது. இதனாலேயே இதில் பெண்களுக்குப் பயன்பாட்டுக் கட்டணம் கிடையாதாம்!

2009-ல் பிரான்சில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், தனது மிக வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்றாக இந்தியாவைப் பார்க்கிறது. இந்தச் செயலியைப் பயன்படுத்துவதில் பெங்களூரு (18%) முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து ஹைதராபாத் (17%), டெல்லி (11%), மும்பை (9%) மற்றும் புனே (7%) ஆகிய நகரங்கள் உள்ளன. லக்னோ, இந்தூர் போன்ற இரண்டாம் நிலை (Tier-2) நகரங்களிலும் இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

app
appa

கிளீடன் செயலி வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியப் பயனர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 1 முதல் 1.5 மணி நேரம் வரை இதில் செலவிடுகின்றனர். ஆண்கள் பெரும்பாலும் 25-30 வயதுடைய பெண்களைத் தேடுகிறார்கள், பெண்கள் 30-40 வயதுடைய (குறிப்பாக மருத்துவர்கள், சிஏ போன்ற தொழில்முறை வல்லுநர்களை) விரும்புகிறார்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த செயலியைப் பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை 148% அதிகரித்துள்ளது. மொத்த இந்தியப் பயனர்களில் 65% ஆண்களும், 35% பெண்களும் உள்ளனர்.

சலிப்பான திருமண வாழ்க்கை மற்றும் துணையுடன் ஏற்படும் புரிதல் குறைபாடு போன்ற காரணங்களால் பலர் இத்தகைய செயலிகளை நோக்கித் திரும்புவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இதையும் தெரிஞ்சிக்கோங்க…

  • உலகிலேயே திருமணத்திற்குப் புறம்பான உறவுகளுக்கான மிகப்பெரிய தளம் ‘ஆஷ்லே மேடிசன்’. 2015-ம் ஆண்டு இந்தத் தளம் ஹேக் செய்யப்பட்டு, மில்லியன் கணக்கான பயனர்களின் விவரங்கள் கசிந்தன. இது உலக அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இருப்பினும், அந்தச் சம்பவத்திற்குப் பிறகு இத்தகைய தளங்களின் பாதுகாப்பு அம்சங்கள் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன என்கிறார்கள்.

  • இந்த வகை செயலிகளுக்கு ஐரோப்பிய நாடுகளில், குறிப்பாக பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பெரும் வரவேற்பு உள்ளது. அங்குள்ள கலாசார மாற்றங்கள் மற்றும் தனிமனித சுதந்திரம் ஆகியவை இத்தகைய தளங்களின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகும்.

divorce
divorce
  • உலக அளவில் எடுக்கப்பட்ட ஆய்வுகளின்படி, இத்தகைய செயலிகள் பெரும்பாலும் அலுவலக நேரங்களில் (முற்பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை) அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. வீட்டிற்குச் சென்ற பிறகு குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவதால், ரகசியத்தைப் பேண இந்த நேரத்தைப் பயனர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.

  • சில சமூக ஆர்வலர்கள் இத்தகைய செயலிகள் குடும்ப அமைப்பைச் சிதைப்பதாகக் கூறினாலும், வேறு சில ஆய்வுகள் `திருமண வாழ்வில் ஏற்படும் சலிப்பைத் தீர்க்கவும், ஒரு தற்காலிக மாற்றத்திற்காகவும்’ மக்கள் இதைப் பயன்படுத்துவதாகக் கூறுகின்றன. சில நாடுகளில் விவாகரத்து வரை செல்லாமல் இருக்க இது ஒரு வடிகாலாக அமைவதாகவும் ஒரு விவாதம் நிலவுகிறது.

இந்தியாவில் கிளீடன் போன்ற செயலிகளின் வளர்ச்சி என்பது வெறும் எண்கள் மட்டுமல்ல, அது சமூகத்தின் மாறிவரும் மனநிலை. ஒரு கண நேரத் தூண்டுதலுக்காக நீண்ட கால உறவுகளைப் பணையம் வைப்பது அறிவுடைமையாகாது. உண்மையான மகிழ்ச்சி என்பது செயலியில் இல்லை; அது நாம் நேசிக்கும் மனிதர்களுடன் நேர்மையாகவும், உண்மையைப் பகிர்ந்து கொள்ளும் தருணங்களிலும்தான் இருக்கிறது.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *