பெருமாள் ஸ்ரீநரசிம்மராக எழுந்தருளியிருக்கும் ஆலயங்கள் பல தமிழகம் முழுவதும் உள்ளன. அவற்றுள் சில தலங்கள் தனித்துவம் வாய்ந்தவை. பொதுவாக நரசிம்மம் என்றால் பெருமாள் சிங்க முகத்தோடு காட்சிகொடுப்பார் அல்லவா… ஆனால் ஒரு தலத்தில் பெருமாள் மட்டுமல்ல கருடாழ்வார், தாயார் ஆகியோரும் சிம்ம முகத்தோடு காட்சி அருள்கின்றனர்.
மேலும் இங்கே ஒன்பது நரசிம்ம மூர்த்திகள் அருள்பாலிப்பது சிறப்பு. அதனாலேயே இதை தட்சிண அஹோபிலம் என்கிறார்கள் பக்தர்கள். வாருங்கள் திவ்ய தேசங்களுக்கு இணையான மகிமையும் பெருமையும் வாய்ந்த அந்தத் தலத்தை தரிசிப்போம்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியிலிருந்து ஆரணி செல்லும் சாலையில் உள்ளது ஆவணியாபுரம். இங்குள்ள சிறுமலையில்தான் ஒன்பது நரசிம்மர்கள் கோயில் கொண்டிருக்கும் சந்நிதிகள் அமைந்துள்ளன.

வரவேற்பு வளைவில் காட்சிகொடுக்கும் தாயாரையும் பெருமாளையும் வணங்கிப் படியேற ஆரம்பிக்க வேண்டும். 30 படிகளைக் கடந்ததும் லட்சுமி நரசிம்மர் சந்நிதியை அடைந்துவிடுவோம்.
மலை இடுக்கில் அமைந்திருக்கும் கருவறையில் அற்புதமாய்க் காட்சி தருகிறார் லட்சுமி நரசிம்மர். அவருடைய மடியில் அமர்ந்து அருளும் லட்சுமிப் பிராட்டியும், சிம்ம முகத்துடன் காட்சி தருகிறார்.
பெருமாளும் தாயாரும் அருளும் இந்த சேவை மனதை நிறைக்கிறது. அதேபோன்று மனத்தில் பாரங்கள் இருந்தாலும் போக்கிவிடுகிறது. தரிசனம் செய்யும்போதே பல பக்தர்கள் உடல் சிலிர்ப்பதை இங்கே உணர்கிறார்கள்.
இரண்யகசிபுவை சம்ஹாரம் செய்தபிறகு அந்த உக்கிரத்தோடு இந்த மலைமீது வந்து அமர்ந்தாராம். அதன்காரணமாக இங்கே சுயம்பு மூர்த்தி ஒன்று தோன்றிற்று. அவரே தற்போதும் சேவை சாதிக்கும் மூலவர்.
இவரின் உக்கிரத்தைத் தணிக்க பிரம்மன் யாகம் ஒன்றைச் செய்தார். அதன் முடிவில் தாயாரும் சிம்ம முகம் ஏற்க கருடரும் தானும் இங்கே சிம்ம முகத்தோடு அருள்பாலிக்க விரும்புவதைத் தெரிவித்தார். அவ்வண்ணமே இந்தக் கோயிலில் மூர்த்திகளாக எழுந்தருளி சேவை சாதித்து வருகின்றனர்.