திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல்: புது நிர்வாகிகளை ஏகமனதாக தேர்வு செய்தது ஏன்? – சரண் விளக்கம்

Spread the love

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 2016-29க்கான தேர்தல் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் தலைவர், துணைத்தலைவர், பொருளாளர், செயலாளர் என பல்வேறு முதன்மை பொறுப்புகளுக்கு போட்டியிட்ட வேட்பாளர்களை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் அவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டனர். சில பதவிகளுக்கு மட்டும் தேர்தல் மூலம் தேர்வு செய்தனர். வெற்றி பெற்ற நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா சென்னையில் இன்று நடந்தது. இந்த விழாவில் சினிமாவின் அனைத்து சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும் பங்கேற்று, புதிய உறுப்பினர்களை வாழ்த்தினார்கள்.

புது நிர்வாகிகள்

புது நிர்வாகிகள்

புதிய தலைவராக ஆர்.கே.செல்வமணி, துணைத்தலைவராக பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், பொதுச்செயலாளராக ஆர்.வி.உதயகுமார், பொருளாளராக பேரரசு, இணை செயலாளராக இயக்குநர்கள் எழில், சரண், சுந்தர்.சி, என்.ஏகம்பவாணன், ஏ.கே.நம்பிராஜன் (எ) நம்பி மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக இயக்குநர்கள் ஆர்.அரவிந்தராஜ், ஏ.ஆர்.முருகதாஸ், வெங்கட் பிரபு, ஏ.வெங்கடேஷ், எஸ்.ரவிமரியா உட்பட பலர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது குறித்து இணை செயலாளரான இயக்குநர் சரணிடம் பேசினோம்.

“‘அனைத்து திரைப்பட சங்கங்கள் ஒரே சமயத்தில் தேர்ந்தலை நடத்திடணும்னு பேசியிருக்கோம். இந்த முறையும் ஜனநாயக முறைப்படி சங்க தேர்தலை நடத்த விரும்பினோம். வழக்கமாக இருந்ததை மாற்றி இப்போது மூணு வருஷமாக கொண்டு வந்துருக்கோம். இனிமே மூணு வருஷத்துக்கு ஒருமுறைதான் தேர்தல் நடைபெறும். போனமுறை பொருளாளராக நான் இருந்தேன். தலைவராக ஆர்.வி.உதயகுமாரும், பொருளாளராக பேரரசுவும், கௌரவ தலைவராக செல்வமணியும் இருந்தாங்க. சென்ற முறை உள்ள அத்தனை பேரும் சிறப்பாக பொறுப்பு வகிச்சதால இந்த முறையும் தேர்வாகியுள்ளனர். பலரும் ஏக மனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஒருசிலர் மட்டும் எதிர்த்து போட்டியிட்டாங்க. ஓட்டு எண்ணிக்கை நேற்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இன்னிக்கு காலையில 10 மணிக்கு கமலா திரையரங்கில் பதவியேற்பு விழா நடந்தது. சென்ற முறை எங்களோட சாதனைகளாக பல விஷயங்களை சொல்லலாம். எல்லாமே கூட்டு முயற்சிதான். இரவு பகல் பாராமல் உறுப்பினர்களுக்கு மருத்துவ உதவிகளை செய்து கொடுத்தார் ஆர்.வி.உதயகுமார் சார். நிறைய உயிர்களை காப்பாற்றுவதற்கான வாய்ப்பு அமைஞ்சது. ஐசரி கணேஷ் சார் உட்பட பலரின் முக்கியமான கல்லூரிகள்ல இலவசமாக சீட் வாங்கி கொடுத்தோம். பண்டிகை காலங்கள்ல வேட்டி- சட்டை, பட்டுப்புடவை வரை கொடுத்தோம்.

பதவியேற்பு

பதவியேற்பு

இந்த முறை தலைவராக பொறுப்பு ஏற்றுக்கொண்ட ஆர்.கே.செல்வமணி முக்கியமான ஓர் அஜென்டாவோடு வந்திருக்கார். உதவி இயக்குநர்களின் ஊதியங்களை சங்கத்தின் வழியாக கொடுப்பதற்கான விஷயங்களை முன்னேடுத்துள்ளார். ஏன்னா, டான்ஸ் யூனியன், ஸ்டண்ட் யூனியன்கள்ல அவங்களோட சம்பளத்தை அவங்கவங்க சங்கங்களுக்கு அனுப்பி வச்சிடுவாங்க. அந்த சங்கங்களும் சின்னதாக ஒரு சர்வீஸ் கட்டணம் வசூல் செய்து, அந்த தொகையை வைத்து பெரியளவுல அந்த உறுப்பினர்களுக்கு நன்மைகளை செய்வாங்க. இந்த முறை உதவி இயக்குநர்களின் சம்பளத்தை சங்கம் வழியாக கொடுக்கும் போது, பெரியளவுல உதவி செய்ய முடியும் என்பதுல புது தலைவர் உறுதியாக இருக்கார். சீக்கிரமே இது நடைமுறைக்கு வந்துடும். ஏன்னா, இப்படி வசதி இல்லாத ஒரே யூனியன் எங்க யூனியன் தான். படப்பிடிப்பில் போதியளவு ஊதியம் பெறாத ஆட்கள், உதவி இயக்குநர்களாகத்தான் இருக்க முடியும். இந்த பக்கம் ஒரு உதவி இயக்குநர் அவனோட கன்வேயன்ஸுக்காக சில நூறு ரூபாய்காக போராட்டிக்கிட்டு இருப்பார். அந்தப் பக்கம் ஒரு நடிகர் நடிகையோட டச்சப் பாய் 10 ஆயிரம், 15 ஆயிரம்னு வாங்கிட்டு இருப்பாங்க. இந்த ஏற்றத்தாழ்வு இனி இருக்கக் கூடாதுனு உதவி இயக்குநர்களின் சம்பளத்தை உயர்த்தியிருக்கோம். சங்கம் வழியாக சம்பளம் போடும் முறையை கொண்டு வரும் போது உதவி இயக்குநர்களுக்கு தங்கு தடையில்லாமல் அவங்களோட வங்கி கணக்குகள்ல

ஆர்.வி.உதயகுமார்

ஆர்.வி.உதயகுமார்

போய்ச்சேர்ந்துடும். தவிர படப்பிடிப்பில் பயோமெட்ரிக் சிஸ்டமும் கொண்டு வரப்போறோம். பெப்சியில் ஏற்கெனவே இருக்கற நடைமுறைதான். படப்பிடிப்புல வேலை செய்யுறவங்க யூனியன்ல உள்ள ஆட்களாக இருக்கணும் என்பதற்காக இந்த முறையை கொண்டு வர்றோம். சில யூனியன்ல இதை இம்ளீமென்ட்டும் செய்துட்டாங்க. ஆர்.கே.செல்வமணி சார் பெப்சியிலும் பொறுப்பில் இருக்கறதால இதை ஒரு பாதுகாப்பானதாகவும் கருதுறோம்.” என்கிறார் இயக்குநர் சரண்.

புதிதாக பொறுப்பேற்றிருக்கும் நிர்வாகிகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறோம்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *