சென்னை: தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் அடைந்த குழந்தைகள் உட்பட 157 பேருக்கு, சென்னை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. புத்தாடை அணிந்து, இனிப்புகளுடன் பட்டாசுகளை வெடித்து மக்கள் தீபாவளியை கொண்டாடினர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பட்டாசுகள் வெடிக்கும் போது ஏற்படும் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 20 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டது. அதேபோல், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், தீபாவளி அன்றும், அதற்கு முந்தைய நாளும் சென்னையில் பட்டாசு வெடிக்கும் போது 157 பேர் தீக்காயம் அடைந்துள்ளனர். இதில், 44 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக 13 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
புறநோயாளியாக 20 பேரும் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக 6 பேர் சிகிச்சை பெறுகின்றனர். புறநோயாளியாக 24 பேரும் சிகிச்சை பெற்றுள்ளனர்.
ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புறநோயாளியாக 3 பேர் சிகிச்சை பெற்றனர். அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உள்நோயாளியாக 16 பேர் சிகிச்சை பெறுகின்றனர். புறநோயாளியாக 32 பேரும் சிகிச்சை பெற்றுள்ளனர்.
கண்களில் தீக்காயம் ஏற்பட்டதால் எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் உள்நோயாளியாக 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புறநோயாளியாக 34 பேரும் சிகிச்சை பெற்றுள்ளனர். இவை தவிர, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்டோருக்கு தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.