சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், எழும்பூர் ரயில் நிலையத்தின் முன்பக்கத்தில் காத்திருக்கும் பயணிகளுக்காக கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தமிழகத்தின் மத்திய, தென் மாவட்டங்களுக்கும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் 50-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் நாள்தோறும் இயக்கப்படுகின்றன.
இதுதவிர, எழும்பூர் ரயில் நிலையம் வழியாக மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக, இந்த நிலையத்துக்கு தினசரி ஒரு லட்சம் பேர் வந்து செல்கின்றனர்.
அதிலும், பண்டிகை காலத்தில், இந்த ரயில் நிலையத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதும். இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், ரயில் நிலையத்தின் முன்பக்கத்தில் காத்திருக்கும் பயணிகளுக்கான பகுதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் பண்டிகை கால கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், “ஹோல்டிங் ஏரியா” என்ற முயற்சியின் கீழ், பயணிகளுக்கான காத்திருப்போர் பகுதி ஏற்படுத்தப்படுகிறது.
அந்த வகையில், எழும்பூர் ரயில் நிலையத்தின் முன்பக்கத்தில் மின்விசிறி, பயணிகள் அமருவதற்கான இருக்கைகளுடன் காத் திருப்போர் பகுதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், ரயில் நிலையத்தின் உட்பகுதியில் கூட்ட நெரிசலை குறைக்க முடியும்” என்றனர்.