பல காட்சிகளை க்ளோஸ்-அப்புகளிலேயே வைத்துள்ள ஒளிப்பதிவாளர் சரவணன் அபிமன்யு, காட்சிக் கோணங்களில் பெரிய வித்தியாசம் காட்டவில்லை.
பாரத் ஆசீவகனின் பின்னணி இசை, சில இடங்களில் பதற்றத்தை ஏற்றினாலும், சைலன்ஸ் என்ற வார்த்தையை அகராதியிலிருந்து நீக்கிவிட்டதைப் போல, சாதாரண காட்சிகளுக்குக்கூட ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை.

படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர், தேர்ந்த காட்சிகளுக்கான வறட்சியைப் போக்க முடியாமல் திணறியிருக்கிறார். அதேபோல டெம்ப்ளேட் காதல் காட்சிகளுக்கு இவ்வளவு கருணை காட்டியிருக்க வேண்டிய அவசியமில்லை; இன்னும் சுருக்கமாக அமைந்திருந்தால் களைப்பு சற்று குறைந்திருக்கும்.
படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஒரு கொலையோடு வலுவான ஆரம்பத்தைத் தந்தாலும், பிறகு மிகத் தாமதமாக எடுக்கப்பட்ட காட்சிகள் படத்தின் தீவிரத்தை நீர்த்துப்போகச் செய்கின்றன. பழகிப்போன, எதிர்பார்க்கக்கூடிய திருப்பங்களோடு இடைவேளை வருகிறது.