துபாய் கார் ரேஸ் விபத்து: அஜித்குமார் அணி கார் தீப்பற்றியதால் பதற்றம் – Kumudam

Spread the love

துபாயில் உலகத்தரம் வாய்ந்த ‘துபாய் 24 ஹவர்ஸ்’ (Dubai 24 Hours) கார் பந்தயம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் நடிகர் அஜித்குமார் தொடங்கியுள்ள ‘அஜித்குமார் ரேசிங்’ (Ajith Kumar Racing) அணி பங்கேற்றுள்ளது. இந்நிலையில், பந்தயத்தின் போது எதிர்பாராத விதமாக அஜித்தின் அணி கார் தீப்பிடித்து எரிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஜித்குமார் ரேசிங் அணியின் கார் பந்தய களத்தில் சீறிப்பாய்ந்து கொண்டிருந்தபோது, திடீரென காரின் எஞ்சின் பகுதியில் இருந்து புகை கிளம்பியது. சில நொடிகளிலேயே கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அப்போது காரை ஓட்டிச் சென்ற வீரர் அயர்டன் ரெடான்ட் (Ayrton Redant), நிலைமையை உணர்ந்து உடனடியாகச் செயல்பட்டு காரை நிறுத்தினார்.

கார் தீப்பிடித்த உடனேயே பாதுகாப்பு உபகரணங்களின் உதவியுடன் அயர்டன் ரெடான்ட் காரில் இருந்து வெளியே குதித்தார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதுடன், அவர் எந்தவித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் கார் சேதமடைந்தது.

இந்த விபத்து குறித்து முதற்கட்ட விசாரணையில், காரின் என்ஜின் கோளாறு (Engine failure) காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிவேகமாக கார் இயங்கிக் கொண்டிருந்தபோது என்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு கசிவை ஏற்படுத்தி தீ விபத்திற்கு வழிவகுத்ததாகக் கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *