ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கு ஆதரவு கொடுத்து வரும் வளைகுடா நாடுகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் துபாய், பஹ்ரைன், அபுதாபி, சவுதி அரேபியாவில் வசிக்கக்கூடிய 90 லட்சம் இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வேலை செய்த கம்பெனிகள் மூடப்பட்டதால் வேலையும் இல்லாமல் சாப்பாடும், பணமும் இல்லாமல் திண்டாடி வருகின்றனர். இது தவிர சுற்றுலா, தொழில் என பல்வேறு காரணங்களுக்காக சென்ற இந்தியர்களும் நாடு திரும்ப முடியாத நிலையில் இருக்கின்றனர்.
அப்படிப்பட்ட இந்தியர்களை சொந்த நாட்டிற்கு அழைத்து வருவதற்கான வேலையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு துபாயை சேர்ந்த இந்திய தொழிலதிபர் ஒருவர் மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை செய்ய முன்வந்து இருக்கிறார்.

யோகேஷ் தோஷி என்ற அத்தொழிலதிபர் அல் மிசான் என்ற நிறுவனத்தை துபாயில் நடத்தி வருகிறார். இவருக்கு துபாயில் 64 மாடிகள் கொண்ட அடுக்குமாடிக் கட்டடம் சொந்தமாக இருக்கிறது. அந்த முழு கட்டடத்தையும் துபாயில் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களுக்காக திறந்துவிட்டுள்ளார்.
இந்திய மக்கள் மன்றம் (IPF) மற்றும் இந்திய தூதரகத்துடன் இணைந்து செயல்படும் இந்த முயற்சியால், ஹோட்டலில் அறைகள் இல்லாமல் தவித்த குழந்தைகள் உட்பட125-க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு இலவச தங்குமிடம் மற்றும் உணவு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட மோஹித் வச்சானி, ரியா மகாடியா, பராஸ் பலோடியா மற்றும் கிரிஷ்மா பலோடியா ஆகியோர் கூறுகையில், “‘ஹோட்டல் முன்பதிவுகள் முடிவடைந்துவிட்டதாலும், ஏற்கனவே தங்கி இருந்த ஹோட்டல்களில் முன்பதிவை நீட்டிக்க சாத்தியம் இல்லாததாலும் நாங்கள் மிகவும் மோசமான நிலையை எதிர்கொண்டோம்.