தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சரக்குகளைக் கையாளுவதில் ஒரே கப்பலில் 147 காற்றாலை இறகுகளைக் கையாண்டு தேசிய சாதனையைப் படைத்துள்ளது.
இதுகுறித்து பேசிய துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோகித், “இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரே கப்பலில் இருந்து 147 காற்றாலை இறகுகள் மற்றும் அதன் உதிரிபாகங்களைக் கையாண்டு தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம் வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளது.
இதற்கு முன்பு, கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி ஒரே கப்பலில் 103 காற்றாலை இறகுகளைக் கையாண்டதே சாதனையாக இருந்தது.

தற்போது அந்தச் சாதனையை வ.உ.சி துறைமுகம் முறியடித்துள்ளது. சீனாவின் “சின்சோ’ (Qinzhou) துறைமுகத்திலிருந்து ‘எம்.வி. போ ரன் ஜியூ சோ’என்ற கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட, தலா 76 மீட்டர் நீளமுள்ள இந்த 147 இறகுகளும் வெற்றிகரமாக இறக்கி முடிக்கப்பட்டன.