தூத்துக்குடி: மழை வெள்ளத்தில் மூழ்கிய 50,000 வாழைகள்; படகில் மீட்டு விற்பனைக்கு அனுப்பிய விவசாயிகள்

Spread the love

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த கனமழை பெய்து வருகிறது.

இதனால், தாமிரபரணி ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பான ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து ஆயிரக்கணக்கான கனஅடி நீர் வீணாக கடலுக்கு சென்றது.

படகில் எடுத்து வரும் வாழைத்தார்கள்
படகில் எடுத்து வரும் வாழைத்தார்கள்

அந்த சமயத்தில் ஸ்ரீவைகுண்டம் அணையில் உள்ள தென்கால்வாயில் இருந்து பாசனத்திற்காக குளங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. திருச்செந்தூர் அருகே உள்ள செம்மறிகுளம் கஸ்பா பகுதிக்கு வந்த நீரின் அளவு அதிகரித்ததால், அருகே இருந்த வாழைத்தோட்டத்திற்குள் வெள்ளநீர் புகுந்தது.

50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் நீரில் முழுவதுமாக மூழ்கியது. அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் மூழ்கியதால் விவசாயிகள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்தனர்.

இதையடுத்து உடனடியாக மீனவர்கள் உதவியுடன் படகுகளைக் கொண்டு வந்து, படகில் தங்களது வாழைத்தோட்டங்களுக்கு சென்று வாழைத்தார்களை அறுவடை செய்து, படகில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்தனர்.

படகில் எடுத்து வரப்படும் வாழைத்தார்கள்
படகில் எடுத்து வரப்படும் வாழைத்தார்கள்

அப்பகுதி விவசாயிகளிடம் பேசினோம்,

“தூத்துக்குடியில் கடந்த 10 நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் தண்ணீர் கடலுக்குச் செல்லும்படியாக திருப்பிவிடப்பட்டது. இதனால், தண்ணீர் பெருக்கெடுத்ததால் அருகில் உள்ள வாழைத்தோட்டங்களுக்குள் புகுந்து 4 முதல் 5 அடி உயரம் வரை தேங்கி நிற்கிறது.

பல வாழைகள் சரிந்து தண்ணீரில் மூழ்கியது. வெள்ளத்தால் அறுவடைக்குத் தயாராக இருந்த வாழைகள் முற்றிலும் மூழ்கியது.

தொடர்மழை காரணமாக, வாழைத்தர்களுக்கு போதிய விலை இல்லாத காரணத்தினால், அறுவடை செய்த வாழைத்தார்கள் அனைத்தும் வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

கரைக்கு கொண்டு வரப்பட்ட வாழைத்தார்கள்
கரைக்கு கொண்டு வரப்பட்ட வாழைத்தார்கள்

ஆனால், பல மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் வாழைத்தார்களுக்கு சரியான விலை கிடைக்கவில்லை. இருப்பினும் வேறு வழியில்லாமல், பாதி விலை கிடைத்தாலும் போதும் என விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றோம்.

வாழைகள் மட்டுமல்லாமல் பப்பாளி, காய்கறிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தோட்டங்களில் உள்ள மோட்டார் அறைகளும் நீரில் மூழ்கி, மோட்டார்களும் பழுதடைந்துள்ளன” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *